புதன், அக்டோபர் 22, 2008

பெத்துசாமி : தாத்தாவின் பேனா

அரசனின் வாள் முனையைவிட பேனா முனை கூர்மையானது - எட்வர்ட்.

To hold a pen is to be at war - வால்டேர்.
--------------------------------------------------------------------

அப்பாடா. ஒரு வழியாக-நான் எழுத வந்த விஷயத்திற்கு, பஞ்ச் டயலாக் கிடைத்தாயிற்று.

அணுவைப் பயன்படுத்தி ஆக்கமும் செய்யலாம், அழிவும் செய்யலாம். அது, கிடைப்பவர் மனநிலையைப்பொறுத்தது. பேனாவும் அப்படித்தான். புரட்சியும் உருவாக்கலாம். சரோஜாதேவி கதைகளும் எழுதலாம். ஆனால், பேனா-எல்லோருக்கும் சுலபத்தில் கிடைத்துவிடும் வஸ்து. (அப்பாடா! தத்துவ டயலாக்கும் கிடைத்தாயிற்று)


பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது-தேர்வு சமயத்தில், பேனாவில் மை தீர்ந்துபோனபோது, 4 சொட்டு இங்க் கொடுத்துதவிய நண்பனை மறக்கமுடியுமா? அதே பள்ளிக்கூடத்தில், ஏப்ரல் -1 அன்று, எல்லோரின் சட்டையிலும், பேனா மசியைத் தெளித்து, அவர்களை, முட்டாள்கள் என்று நகைக்கிறோம். (லாஜிக் இடிக்கிறதே!)

நம் அன்றாட வாழ்வில்-பேனா-எவ்வளவோ அங்கம் வகித்தாலும், இன்றைய தலைமுறை இளைஞர்கள், பையில் பேனா வைத்துக்கொள்வதில்லை. வங்கியில், படிவங்களைப் பூர்த்தி செய்யும்போது, “எக்ஸ்க்யூஸ், மீ...பென் ப்ளீஸ்..” என்று ஸ்டைலாக பேனா கடன் கேட்கும், இளைஞனைப் பார்க்குபோது,கோபம் பொங்கிவருவதைத் தடுக்கமுடியவில்லை. வெட்டியாகப் பேசி பொழுதுபோக்குவதற்கு, கையில் செல்ஃபோன் இருக்கும்போது, உருப்படியாய் எழுதுவதற்கு ஒரு சிறிய பேனாவைப் பையில் வைத்துக்கொள்வதற்கு என்ன வலிக்கிறது? இப்போதெல்லாம் யாரும் தொலைபேசி எண்களை எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கமில்லை.எல்லாம் செல்ஃபோனின் நினைவடுக்கில்தான் பதியவைக்கப்படுகிறது. செல்ஃபோன் தொலைந்துபோனால், கூடவே, நண்பர்களின் தொடர்பும் அற்றுப்போகிறது.

முதன்முதலாக என் (அம்மா வழி) தாத்தா, எனக்கு வாங்கித்தந்த பேனா, எனக்கின்னும் ஞாபகமிருக்கிறது. ஒரு நாள் விடியற்காலை, 5 மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு, திருச்சி மாவட்டத்திலிருக்கும் வீரகனூர் என்னும் ஊருக்கு புறப்பட்டுப் போனோம் நானும், தாத்தாவும். அப்போதெல்லாம், வீரகனூர் பேனா என்றால், படுபிரசித்தம். சுமார் 8 மணிக்கு வீரகனூரை அடைந்த நாங்கள், ஒரு பேனா கடைக்குச்சென்றோம். அட்டா, எத்தனைவிதமான பேனாக்கள். கடை முழுவதும் ஒரே பேனா மயம், எக்கச்சக்கக் கூட்டம் வேறு. 5 ரூபாய் பேனாவுக்காக (1985-ல்) அந்தக் கடையையே புரட்டுப்போட்டார் என் தாத்தா. இந்தப்பேனாவில், முள் சரி இல்லை. இதில், நாக்(கு)கட்டை சரியில்லை. கலர் சரியில்லை. மரை சரியில்லை, மூடி சரியில்லை.கடைக்காரர்கள் மிரண்டுபோனார்கள். இறுதியாக, ஒரு மரக்கலர் பேனாவை எனக்காக தேர்வு செய்து கொடுத்தார்.ஒரு சின்னபேனாவுக்காக 1 மணி நேரம் இத்தனை ஆர்ப்பாட்டமா? தாத்தாவிடம் கேட்டேவிட்டேன்.


”ஒரு பேனாவுல எழுதக்கத்துக்கிட்டம்னா, அது நமக்கு பழக்கமாகிடும். கையெழுத்தும் அழகாகிடும். புதுப் பேனாவை வச்சி பரிச்சை எழுதியிருக்கியா?”.ரொம்பக்கஷ்டம். புதுப்பேனாவின் முள், பேப்பரைக் கிழித்துவிடும் அபாயமிருக்கிறது. இங்க் ஒழுகலாம். அது பேப்பரை நனைத்து, விடைத்தாள் திருத்துபவரை வெறிகொள்ளச்செய்யும். உண்மை. இதை நான் என் வாழ்க்கையில் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

நான் எத்தனையோ பேனாக்களை இழந்திருக்கிறேன். வாங்கியிருக்கிறேன். என்னால், ஒற்றைப்பேனாவுடன் மனைவி மாதிரி குடித்தனம் நடத்த முடிந்ததில்லை. ஆனால், எனக்குத் தெரிந்த மட்டில் என் தாத்தா, ஒரே ஒரு ஜோடி பேனாவுடன் நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறார்.அவரின் வேலை அப்படி. என் தாத்தா ஒரு பத்திர எழுத்தர். பத்திரம் எழுதும்போது அவர் தன் பேனாவின் முள்ளை 360 டிகிரியிலும் சுழற்றி, சுழற்றி எழுதுவதைப் பார்த்து, அதே போல், நானும் ஸ்டைலாக எழுதியிருக்கிறேன்.

தாத்தாவை, பேனா இல்லாமல் என்னால் கற்பனைக் கூட செய்துபார்க்க முடியாது.தொடக்கக்கல்வி கற்ற நாட்களில், பள்ளி செல்லும் சமயங்களில், பெரும்பாலும் தாத்தாவை, பாபு டீ கடை வாசலில் பார்ப்பேன். குளித்து முடித்து, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து இருப்பார்.தோளில் வெள்ளைத்துண்டு. நெற்றியில் விபூதிப்பட்டையிருக்கும். (வைணவர் எப்படி பட்டை அணிந்திருந்தார் என்று இப்போதுதான் எண்ணிப்பார்க்கிறேன்). நடுவில்,ஒரு பெரிய குங்குமம்.சட்டைப்பையில், இரண்டு பேனாக்கள் எப்போதும் இருக்கும். ஒன்று நீல நிற மசியுடன், இன்னொன்று கருப்பு நிற மசியுடன். கூட யார் இருக்கிறார் என்று கூட நான் பார்ப்பதில்லை. அந்த வயதுக்கேயுரிய வெகுளித்தனத்துடன் கையை நீட்டி, “தாத்தா, காசு குடு” என்று கேட்பேன்.அருகில், இருந்த மன்னாதி உடையார் ஒரு முறை சிரித்துக்கொண்டே சொன்னார். “கப்பம் வாங்க ஆளு வந்தாச்சி. குடுத்து அனுப்பு”. தாத்தாவும், புன்னகைத்துக்கொண்டே 10 பைசா கொடுப்பார்.இது தினமும் நடக்கும். அது ஒரு மகிழ்ச்சிகாலம்.

ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு முன், தனது 72 ஆவது வயதில், தாத்தா இறந்துபோனார். அப்போது எனக்கு வயது 30. எங்கள் வீட்டில் நடக்கும் முதல் சாவு அது. எனக்கு அழக்கூடத் தெரியவில்லை. அல்லது அழுகை வரவில்லை.என் அண்ணன் அழுது அரற்றினார். ”இப்போ தான் டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போனன். டாக்டர் நெஞ்சு வலிக்கு ஊசிபோட்டாரு.வீட்டுக்கு வந்து படுத்ததும், கொஞ்ச நேரத்துல, செத்துட்டார்.”

தாத்தாவின் கடைசி காலம் அவ்வளவு உசிதமாக இல்லை. பத்திரம் எல்லாம் யாரும் எழுதுவதில்லை. எல்லாம், கம்ப்யூட்டர் பிரிண்ட் தான். ஆகையால் அவருக்கு அதிகம் வேலை கிடைக்கவில்லை. பெரும்பாலான சமயங்களில் அண்ணனிடம் வந்து காசு வாங்கிச் செல்வார். அப்போதெல்லாம், என் அண்ணன் என்னிடம் சொல்லி வருத்தப்படுவார்.

தாத்தாவைப் புதைக்க சுடுகாட்டுக்கு வந்தோம். தலையில், துணியைக்கட்டி, வேட்டி, சட்டையுடன் தாத்தா குழியில் இடப்பட்டார். வெட்டியான் முருகேசன், தாத்தா பையிலிருந்த காசுகளை எடுத்துக்கொண்டான். அவர் பையிலிருந்த பேனாவை அவன் எடுக்க எத்தனித்த போது, அம்மாசி அய்யா வெடித்து அழுதபடியே, அவனைப்பார்த்துக் கத்தினார். “டேய், மசுராண்டி, அந்தப் பேனாவை எடுக்காதடா. அதுதாண்டா, அவருக்கு சோறு போட்டுச்சி. அவரு அந்தப் பேனாவோட போவுட்டும் வுடுடா.” சட்டைப்பையில் பேனாவோடு தாத்தாவைப் பார்த்த நான், எதை நினைத்தேனோ தெரியவில்லை. என் கண்களில் நீர் கரகரவென சுரந்தது. சத்தமிட்டு அழ ஆரம்பித்தேன். அண்ணன் என்னை அணைத்துக்கொண்டார்.

எல்லோரும், குழியில் மண்ணைத்தள்ள ஆரம்பித்தார்கள்.

நிற்க, இது ஒரு மீள்பதிவு.

வெள்ளி, அக்டோபர் 10, 2008

செல்வி. பெ.சௌம்யா - ஒரு இம்சை அரசி அறிமுகம்



இன்றையத் தேதிக்கு, செல்வி பெ.சௌம்யாவின் வயது மூன்று ஆண்டுகள் மற்றும் 53 நாட்கள். ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி, அவரைப் பள்ளிக்குக் கூட்டிச்சென்றார் சௌமியாவின் தந்தை. சுட்டி டிவியில் வரும் ’டோராவின் பயணங்கள்’ தொடரின் தீவிர ரசிகரான சௌமியா, தன் தந்தையிடம் ’அய்யா, குள்ளநயி வவுமா? என்றார். ’வராது கண்ணு. வந்தா திருடக்கூடாது குள்ளநரின்னு சொல்லிடலாம்’ என்று சொன்னார் அவரின் தந்தை. ஹோண்டா ஸ்ப்லெண்டர் ப்ளஸ் வண்டியின் பெட்ரோல் டேங்கர் மேல், தன் தாயாரால் உட்கார வைக்கப்பட்டார் செல்வி. பெ.சௌம்யா அவர்கள்.

‘பாப்பா, எங்கப்போறீங்க தெரியமா? என்று தன் தாயார் கேட்டதும், “ஃபூலுக்கு’ என்றார் சௌ. ‘அங்கபோயி அடம் பண்ணக்கூடாது. உச்சா வந்தா, பாத்ரூம் எங்கன்னு கேட்டு போகணும். சரியா?’ ‘சரிம்மா’ என்று சொல்லி தலையாட்டினார் சௌ. மேலும், அம்மாவுக்கு டாட்டா காட்டிவிட்டு, ‘அய்யா, போலான்யா’ என்று கத்தினார். வண்டி புறப்பட்டது.

பள்ளி செல்லும்வரை, தெருவை வேடிக்கைப்பார்த்துக்கொண்டு வந்தவர், பள்ளியை நெருங்கியதும், சற்றே சீரியஸானார். ’விஸிடெக் அகாடமி’ என்னும் வரவேற்புப்பலகையை விசித்திரமாகப் பார்த்தவாறே, வண்டியிலிருந்து இறக்கப்பட்டவர், ‘அய்யா, டூக்கு’ என்று சொல்லி, கைகள் இரண்டையும் மேலே தூக்கினார். ‘அடடா, நடந்து வாம்மா’ என்று சொல்லிக்கொண்டே அவரைத் தூக்கிக்கொண்ட தந்தை, பள்ளியின் வாயில் நோக்கி நடந்தார்.

‘ஆயியே..’ என்று அவர்களை வரவேற்றுப்பேசினார் தலைமையாசிரியை. ‘ஆஜ் ஜல்தி ஆயியே..கியாரா..பாரா பஜே பர். க்யோங்கி, ஸ்கூக் கேலியே ஏ நயா ஹை நா?’ தன் அரைகுறை ஹிந்தி அறிவை வைத்துப் புரிந்து கொண்டார் செல்வி.சௌமியாவின் தந்தை. அதாவது, செல்வி. சௌ அவர்கள் பள்ளிக்குப் புதியவராம். அதனால், சீக்கிரமாக - அதாவது 11 அல்லது 12 மணிக்குள் சீக்கிரம் வந்து கூட்டிச்செல்ல வேண்டுமாம்.

‘டீக் ஹை மேடம்’ என்றார்.

‘ஆவோ பேட்டா’ என்று சொல்லி தலைமையாசிரியை கையை நீட்டியவுடன், ’வீல்’ என்று அலறிக்கொண்டு தன் தந்தை மீது பாய்ந்தார் செல்வி சௌ. அவரைத்தூக்கித் தோளில் போட்டு, முதுகில் தட்டிக்கொடுத்தபடியே அவரின் தந்தை சொன்னார். ‘அழுவக்கூடாது. நிறுத்து’. ‘அய்யா.அய்யா...’ என்று தேம்பித்தேம்பி அழுத சௌமியாவை, தட்டிக்கொடுத்தார் சௌவின் தந்தை.

‘இன்கோ ஹிந்தி நஹி ஆத்தா ஹை க்யா?’ என்று கேட்ட த.ஆ.விடம், ‘நஹி மேடம். சிர்ஃப் தமிழ் ஆத்தா ஹை’ என்றார் அவரின் தந்தை.

’ப்ரதீபா’என்று குரல் கொடுத்தார் த.ஆ. உள்ளே இருந்து வந்த ப்ரதீபா (நர்சரி வகுப்பின் ஆசிரியை) செல்வி சௌமியாவை, அவரின் தந்தையிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துச்சென்றார். கதவு சாத்தப்பட்டது. உள்ளேயிருந்து செல்வி.சௌ.வின் அழுகைக் குரல் தெளிவாகக்கேட்டது.

இரவு அலுவலகத்திலிருந்து வந்த தந்தையைக் கண்டவுடன் உற்சாகமானார் சௌ. அவரின் தந்தை ஆடையை மாற்றும்போது லுங்கி கொண்டு வந்து கொடுத்தார்.

அசதியில் சோஃபா மீது அமர்ந்த தந்தையின் தோளில் உட்கார்ந்துகொண்டார் சௌ. ‘கண்ணு, அய்யாவ தொந்தரவு செய்யாத, பாவம் அவளே (?!) களச்சிப்போயி வந்துருக்கா’ என்றபடி அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் சௌமியாவின் தாயார்.

செல்வி சௌமியாவிடம் ‘கண்ணு, உனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா?’ என்ற தந்தையிடம் ‘இல்லய்யா’ என்று தலையை இடம்வலமாக ஆட்டினார் சௌ. ‘ஏம்மா, புடிக்கல?’ பதில் சொல்லத்தெரியாமல் சிரித்தார் சௌமியா. ‘அவங்க ஹிந்தியில பேசுறது, இவுலுக்கு புரியாது இல்லயா. அது தான், பிடிக்கலைன்னு சொல்றா போலருக்கு’ என்றார் தாயார்.

தனக்குப்புதிதாகக் கொடுக்கப்பட்டப் பாடப் புத்தகங்களை பிரித்து ஆர்வமாகப்பார்த்த சௌ. ’இது என்னாய்யா?’ என்று ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தார். எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே வந்த செல்வி.சௌமியாவின் தந்தை, திடீரென அவரிடம், ‘கண்ணு, அய்யா, எங்க போய்ட்டு வர்றாரு?’
’ஆபீஸ்’
‘பாப்பா?’
‘ஃப்பூல்”
’அய்யா?’
’ஆஃபீஸ்’
’பாப்பா’
‘ஃபூல்’

மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்தார் சௌமியாவின் தந்தை.

கேட்டுக்கொண்டே வந்த சௌமியாவின் தாயார், ‘ஏண்டி அழிச்சாட்டி (அழிச்சாட்டியம் செய்கிறவர்) புள்ளய நக்கல் பண்ற?’ என்று சொல்ல, ‘அம்மா, அய்யா நக்கல் மா’ என்று சொல்லி சிரித்தார் சௌமியா.


புதன், அக்டோபர் 08, 2008

2011-ல் நம்பர்-1 இலக்கியவாதி யார்?

வேறு யாருமில்லை, அடியேன் தான். எதற்கு சிரிக்கிறீர்கள்? சாதாரணத் தமிழில் எழுதுபவன் எப்படி இலக்கியவாதியாக முடியுமென்றா?

2011-ல் ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், ரித்தீஷ் இவர்களெல்லாம், தமிழகத்தின் முதலமைச்சர் ஆக முடியுமென்றால், என்னால், தமிழில் நம்பர் 1 இலக்கியவாதியாக முடியும்தானே? (நீ ‘இலக்கியவியாதியாகத்தான் முடியும் என்று நீங்கள் நினைப்பது, எனக்குத் தெரியும்).

சரி, அரசியலில் நுழையத்தான் எந்த விதமானத் தகுதியும் அவசியமில்லை. ஆனால், இலக்கியத்திற்கும் அப்படித்தானா? அப்படியில்லை.

எனில், நான் இலக்கியவாதியாக மாற எடுத்துக் கொண்ட பயிற்சிகள் யாவன?

1. இதுவரை நான் தமிழில் ஒரு சிறுகதைகூட எழுதியதில்லை. (இது எப்படி தகுதியாகும் என்று நீங்கள் கேட்கலாம். தமிழைக் கொலை செய்து-அந்தப் பாவத்தை நான் இதுவரை சுமந்ததில்லை)

2. எனக்கென்று ஒரு இணையத்தளத்தைத்திறந்திருக்கிறேன். (பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் சிலேட்டில் எழுதப்பழகுவதைப்போல, இணையத்தில் இலக்கியம் எழுதப்பழகுவது சாலவும் நன்று என்கிறார் இணைய முன்னோடி ஒருவர்)

3. என்னுடைய நண்பர்கள் நிறையபேர் என்னுடைய எழுத்தை ரசிக்கிறார்களென்பது என் தாழ்மையான அபிப்ராயம் (ஒவ்வொரு முறை - இடுகை (அ) மொக்கைப்பதிவு இடும்போதெல்லாம், என் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி தெரிவிப்பேன். பிறகு அபிப்ராயம் கேட்பேன். பெரும்பாலும், அவர்களின் பதில் இவ்வாறே அமையும் - “ஏன் ஆஃபீஸில் இப்பெல்லாம் வேலையே தர்றதில்லையா?”)

4. இலக்கியமென்றால் என்னவென்று தெரியாமல் கொஞ்ச நாள் தெரு பொறுக்கிக்கொண்டிருந்தபோது, திவாகரன் தம்புவிடம் சென்று, இலக்கியமென்றால் என்னவென்று கேட்டேன். அது ஒரு காலம் காட்டும் கண்ணாடி என்றார். (ஆக, இலக்கியமென்றால், அடியேனுக்கு என்னவென்று தெரியும்)

5. இலக்கியவாதி யார்? (இது தான் எனக்கு பதில் தெரியாத கேள்வி. என்றாலும், நான் சில அனுமானங்களை வைத்திருக்கிறேன். சில கலைச்சொற்களை அடிக்கடி தன் எழுத்தில், ஆங்காங்கே போட்டு நிரப்பும் வல்லமை வேண்டும்.பின் நவீனத்துவம்,விளிம்பு, கட்டுடைத்தல், இருத்தலியம், படிமம், கூறு, அவதானம், உள்ளீடு...போதாதா அய்யா?)

6. அரசியல்வாதிகளுக்கு விழும் திட்டுபோலவே, சமயத்தில் இலக்கியவாதிகளுக்கும் நிகழுமென்பது எனக்குத் தெரியும். (என் பரம்பரை பற்றி அவதூறாக யாராவது திட்டினால், “காய்ச்ச மரம் தானே கல்லடிபடும்” என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வேன்)

7. யாராவது என்னை வணிக எழுத்தாளன் என்று சொன்னால், எனக்கு கொலைவெறி கிளம்பிவிடும். (நிற்க, என் எழுத்தை மக்கள் பரவலாகப்படித்தால் தானே, நான் அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியும். என்றாலும், என்னை நீங்கள் இலக்கியவாதி என்று அழைத்தால், நான் பரவசப்படுவேன்.)

ஆகவே, என்னையும் ஒரு இலக்கியவாதியாக கருதி, என் எழுத்துக்களை நீங்கள் படிக்கவேண்டுமாய், தமிழ் கூறும் இணைய உலகத்தை, வேண்டி, விரும்பி கேட்டுக் கொல்கிறேன் (கொள்கிறேன் அல்ல!)