புதன், ஏப்ரல் 28, 2010

காதல் இனிக்குதய்யா.....

சுமித்ராவை நான் முதன்முதலில் சந்தித்தது, என் நண்பன் ஒருவனின் கம்ப்யூட்டர் சென்டரில்தான். அந்த சமயத்தில் நானும் ஒரு கம்ப்யூட்டர் கல்வி நிலையத்தை நடத்திவந்தேன். மனநோயிலிருந்து நான் வெளிவர ஆரம்பித்த நிலையில், 3 கம்ப்யூட்டர்களுடன் அதை ஆரம்பித்திருந்தோம். மாத வருமானம் மின்சாரக் கட்டணத்திற்கே சரியாகிவிடும். என் அண்ணன் அதை லாப நோக்கோடு பார்க்காமல், என் கம்ப்யூட்டர் அறிவை புதுப்பித்துக்கொள்ளும் பொருட்டே அதை எனக்கு ஆரம்பித்துக்கொடுத்திருந்தார்.நானும், என்னை நம்பி வந்த 5 மாணவர்களுக்கு எனக்குத் தெரிந்ததை சொல்லிக்கொடுத்து, கம்ப்யூட்டர் பற்றிய விழிப்புணர்வை அவர்களிடம் உசுப்பிவிட்டேன். இந்தக் காலக்கட்டத்தில்தான் தனது சென்டர் மாணவர்களுக்கு டேலி (Tally) கற்றுக்கொடுக்கச்சொல்லி என் நண்பன் வேண்டுகோள் விடுத்தான். ஏதோ கொஞ்சம் அதை நான் கற்றுவைத்திருந்தக் காரணத்தினால், துணிந்து அவன் சென்டருக்கு சென்றேன். நிற்க, என் ஊருக்கும், என் நண்பனின் ஊருக்கும் உள்ள தொலைவு 3 கி.மீ. மட்டுமே.

சுமித்ரா அங்கே அடிப்படை கம்ப்யூட்டர் கல்வி சொல்லித்தரும் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாள்.  அவளை முதன்முதலில் பார்த்தபோது, எனக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை. அவள் அப்படியொன்றும் அழகில்லை என்று தோன்றியது.ஒன்றை மட்டும் நான் அவளிடம் கூர்ந்து கவனித்தேன். அவள் நடக்கும்போது இடது பக்கமாக சாய்ந்து சாய்ந்து நடந்தாள். எனக்குப் புரிந்துவிட்டது. அவளுக்கு இடது கால் போலியா நோய் தாக்கியதில் பலமிழந்திருக்கிறது.

அடுத்த நாள் நான் அந்த சென்டருக்கு சென்றபோது, யாரும் இருக்கவில்லை. சுமித்ரா மட்டும் இருந்தாள்.

“சார் இன்னும் வரல. வெய்ட் பண்றீங்களா?” என்று கேட்டாள். நான் சரியென்று தலையசைத்ததும், ஒரு நாற்காலியில் அமரச் சொன்னாள். பிறகு ஒரு கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆஃபீஸில் வேலை செய்யத்துவங்கினாள். அப்போது தான் அவளைக் கவனித்தேன். பாவாடை, தாவணியில் மிக லேசான மேக்-அப்புடன் அழகாகத் தோன்றினாள். அவளின் காலைப் பற்றி எண்ணியபோது பாவமாக இருந்தது. ஹ்ம்ம்.. யாராவது நல்லப்பையன் இவளுக்குக் கணவனாகக் கிடைக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

அன்றிரவு என்னால் தூங்கமுடியவில்லை. சுமித்ரா பற்றிய எண்ணங்களே என்னை சுற்றி, சுற்றி வந்தன. ”என்ன ஒரு எகத்தாளம், யாரோ ஒரு நல்லப் பையன் அவளுக்குக் கிடைப்பானாம். இப்படித்தான் தப்பிப்பதா?” என் மனம் என்னை கேலி செய்தது. அதே சமயம் ”அந்தப்பையன் ஏன் நானாக இருக்கக்கூடாது?” என்ற எண்ணம் தோன்றியது. மனநிலை தேறி வரும் நிலையில், இந்தப்பெண்ணைக் கல்யாணம் செய்வதின் மூலம் நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கமுடியுமே. முடிவு செய்துவிட்டேன். அவளிடம் என் காதலை சொல்லிவிடுவதென்று.

காதலை சொல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பயமாக இருந்தது. என்றாலும், சுமித்ராவை சந்திக்கும்போதெல்லாம், எனக்கு ஏற்பட்ட மனநோய் பற்றியும், அதிலிருந்து நான் மீண்டு வருவது குறித்தும் பேச ஆரம்பித்தேன். அவளும் அதை ஆர்வமாகக் கேட்டுக்கொள்வாள். அவளும் தனக்கு 3 வயதாக இருக்கும்போது, போலியோ அட்டாக் வந்ததாகவும், அது இடது காலைப் பாதித்து, ஓரிரு அறுவை சிகிச்சைக்குப்பின்னர் நடக்க முடிவதாகவும் சொன்னாள்.

என் கம்ப்யூட்டர் நிலையத்தில் படித்துவந்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் (பிஞ்சிலேயே பழுத்தவன்) எப்படியோ இதை மோப்பம் பிடித்துவிட்டான். ஒரு நாள் அவன் என்னிடம் வந்து, “சுமித்ரா அக்கா பி.ஏ.படிக்கிறாங்க. அவங்க **** ஜாதி. கடவுள் பக்தி அதிகம். ஒவ்வொரு பௌர்ணமியும் அவங்க முருகன் கோயில் அடிவாரத்துல இருக்க மாரியம்மன் கோயிலுக்கு வருவாங்க....” என்றான். நான் சட்டென்று அவனை கையமர்த்தினேன். “இதையெல்லாம் எங்கிட்ட ஏண்டா சொல்ற?”. “எனக்குத் தெரியும்ணே நீங்க அந்த அக்காவ லவ் பண்றீங்க. இல்லாட்டி ஏன் அடிக்கடி அவங்க சென்டருக்கு போறீங்க?”. பதில் சொல்லமுடியாமல் அவனைப்பார்த்தேன்.”விடுங்கண்ணே, பாத்துக்கலாம்.” எல்லாம் என் நேரம். 15 வயது பையன் எனக்கு அட்வைஸ் பண்ணுகிறான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை என் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணும், அந்த பிஞ்சில் பழுத்தப் பயலும், சுமித்ராவை நட்பு முறையில் என் சென்டருக்கு வரவழைத்தார்கள். நானும் சுமித்ராவை வரவேற்றப் பின்னர் ஒரு டேபிளைச் சுற்றி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.என் சென்டரின் பெண் நைஸாக வெளியேப் போனாள். அந்த பிஞ்சுப்பயல் என்னைப்பார்த்து கண்ணைக்காட்டினான். பிறகு லேசானக் குரலில் சொன்னான் என்னிடம் “அண்ணே, சொல்லுங்க”.. நானோ பயத்தின் பிடியில் இருந்தேன். காதல் சொல்லும் கணங்களில், உயிர் போய் திரும்ப வரும் என்பது உண்மைதான் போலும். ”கொஞ்சம் இருடா” என்றேன். சுமித்ரா இதைக் கண்டவுடன், “என்ன பேசிக்கிறீங்க, எனக்குப் புரியல” என்றாள். நான் சற்றுத் தயங்கினேன். அப்போதுதான், அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடந்தது. அந்த பிஞ்சுப்பயல் சட்டென்று சுமித்ராவை நோக்கி,”அக்கா, நீங்க எங்க அண்ணனை லவ் பண்றீங்களா?” என்றான். சுமித்ரா பயந்துபோய்விட்டாள்.

“இல்ல.. நான் அவரை என் குருவாதான் பாக்குறேன்”. மத்தபடி வேற எண்ணமெல்லாம் இல்லை.”

எனக்கோ பயங்கர அதிர்ச்சி. இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு கேட்டேன்.

“நான் உங்கள லவ் பண்ண சொல்லல. என்னை கல்யாணம் பண்ணிக்க் உங்களுக்கு இஷ்டமா?”

இப்போது அதிர்ச்சி அவள் பக்கம். “எங்க அம்மா சொன்னா, யார வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்குவேன்”.

“அப்போ உங்க அம்மாவைப் பார்த்து நான் பேசலாமா?”..

”சரி” என்றாள்.

இரண்டு நாட்களாய் எனக்கு தூக்கம் வரவில்லை. அவளும் என்னை லவ் பண்ணுவதாய் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படி குரு என்று சொல்லுவாள் என்று கனவில் கூட நினைத்திருக்கவில்லை. நல்லவேளை அண்ணன் என்று சொல்லவில்லையே! 3ஆவது நாள் எனக்கு சுமித்ராவிடமிருந்து ஃபோன் வந்தது. “நான் உங்களப் பத்தி என் அம்மாகிட்ட சொல்லியிருக்கேன். வந்து பேசச் சொன்னாங்க. அப்புறம் உங்களை எனக்குப் புடிச்சிருக்கு”.

றெக்கக் கட்டிப்பறந்தேன். சுமித்ராவின் வீட்டுக்குப் போனேன். சுமித்ராவின் அம்மாவிடம் பேசினேன். எம்.சி.ஏ. படித்திருப்பதால் நல்ல வேலை கிடைக்குமென்றும், ஆரம்ப சம்பளமே 20 ஆயிரத்துக்கும் மேல் கிடைக்குமென்றும் சொன்னேன்.ஆனால், வேலை வாங்கிவிட்டுதான் கல்யாணம் செய்துகொள்வேன் என்றும் சொன்னேன்.  அவருக்கும் என்னைப் பற்றி நல்ல அபிப்ராயம் வந்துவிட்டது. மேலும், ”சாதிப் பிரச்சினை இருக்கிறதே” என்றார். அதை நான் சமாளித்துவிடுவதாகச் சொன்னேன்.

இது நடந்து 1 மாதத்திற்குள் நான் சுமித்ராவை நன்கு புரிந்துகொண்டிருந்தேன். அவளும் என்னை. திடீரென்று ஒரு நாள் சுமித்ரா என்னை வந்து சந்தித்தாள். தன் சொந்தக்காரர் ஒருவர் சென்னையில் லேடீஸ் ஹாஸ்டல் நடத்துவதாகவும், தான் அங்கு வார்டனாக பணிபுரிய சென்னை செல்வதாகவும் சொன்னாள். கஷ்டமாக இருந்தது. அனுப்பிவைத்தேன். 1 மாதம் கழித்து நானும் சென்னைக்கு வேலை தேடி சென்றேன். என் கம்ப்யூட்டர் சென்டர் மூடப்பட்டது.

கஷ்டப்பட்டு ஒரு வேலை வாங்கினேன். மாத சம்பளம் 20ஆயிரம் ரூபாய். மூன்று மாதங்கள் கழித்து சுமித்ராவை பதிவுத்திருமணம் செய்துகொண்டேன். வீட்டிற்குத் தெரிந்து ஃபோனிலேயேத் திட்டினார்கள். இனி உனக்கும், எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்றார்கள். அழுது அரற்றினேன். சுமித்ரா தேற்றினாள். கோடம்பாக்கத்திலிருக்கும் ஒரு மாரியம்மன் கோயிலில் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டோம். சுமித்ராவின் சொந்தக்காரர்கள் வந்திருந்தார்கள். தனிக்குடித்தனம் போனோம். சுமித்ரா வேலையை உதறினாள்.

ஏற்கெனவே நான் மனநோய் பாதிப்பிலிருந்ததைக் கணக்கில் கொண்டு, நான் சந்தோஷமாய் வாழவேண்டுமென்று என் குடும்பம் என்னை மனமுவந்து ஏற்றுகொண்டது.

சுமித்ரா வீட்டிலிருந்து வரதட்சிணையாக ஒரு பைசா கூட நான் வாங்கவில்லை. நாங்களே சிக்கனமாய் இருந்து நிறைய பொருட்கள் வீட்டிற்காக வாங்கியிருக்கிறோம். வாழ்க்கை சந்தோஷமாயிருக்கிறது. சௌமியாவும் (5 வயது), தீபிகாவும் (1 வயது) மகள்களாய் இருக்க, வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்?

14 கருத்துகள்:

  1. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி டாக்டர் அய்யா. என் சந்தோஷமான வாழ்க்கைக்கு நீங்களும் ஒருவகையில் உதவி செய்திருக்கிறீர்கள். அதை நான் மறக்கமாட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. உள்ளத்து ஊனத்துடன் உலா வரும் மாக்களின் நடுவில்
    மனிதாபமானத்துடன் ஊனம் கொண்ட உங்கள் உள்ளத்து ஊர்வசியுடன்
    நலம் பல பெற்று நலவாழ்க்கை நடத்திடவே கள்ளமிலா நெஞ்சுடன்
    களிப்புடனே வாழ்த்துகிறேன் என் அறிவுரையோ உதவியோ தேவைப்பாட்டால்
    அதன் யான் பெற்ற பேராக கருதுவேன். என்னை என் நேரமும் 8122075181 என்ற எண்ணில்
    தொடர்பு கொள்ளலாம் -ravan 181

    பதிலளிநீக்கு
  3. ச்ச செம்ம தலைவா, சிலிர்ப்புடன் தட்டச்சுகிறேன்....உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம்சிறப்பாய் அமைய ஆண்டவனை வேண்டுகிறேன்... -@NForNeil

    பதிலளிநீக்கு
  4. @kosaaksi மிக்க நன்றி தல. உங்களின் வாழ்த்து சந்தோஷமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. உங்களின் அன்பிற்க்கு நான் தலை வணங்குகிறேன்


    வாழ்க பல்லாண்டு

    பதிலளிநீக்கு
  6. உங்களின் அன்பிற்க்கு நான் தலை வணங்குகிறேன்


    வாழ்க பல்லாண்டு.

    பதிலளிநீக்கு
  7. சூப்பர் நண்பரே, காதலுக்கு என்று தனி இடம் எப்போதும் உண்டு அதை நிருபித்து விட்டீர்கள், பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் நண்பரே! முடிந்தால் ட்விட்டர் கு திரும்ப வாருங்கள்

    பதிலளிநீக்கு
  9. அருமைங்ணா !! பொதுவா ப்ளாக்ல கமெண்ட் செய்த்ததே கிடையாது, அதுலாம் பெரிய இடத்து சமாச்சாரம்னு ஒதுங்கிக்குறது ! நிச்சயம் அடுத்த முறை பூனே வரும் போது சந்திக்குறோம்..

    பதிலளிநீக்கு
  10. செம ! பொதுவா ப்ளாக்ல கமெண்ட் செய்த்தே கிடையாது.. அடுத்த முறை பூனே வரும் போது நிச்சயம் சந்திக்குறோம்...

    பதிலளிநீக்கு