செவ்வாய், நவம்பர் 27, 2007

அச்சம் என்பது உடைமையா?
********************************************************************************

விஞ்ஞானம் எந்த அளவு முன்னேறி வருகிறதோ, அந்த அளவுக்கு மக்களிடம் முட்டாள்தனமும் வளர்ந்து வருகிறது என்று சொன்னால் அது மிகை இல்லை.

சமீபத்தில் என்னை எரிச்சல் அடைய வைத்த சம்பவங்கள் சில.

1. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா விடுத்த அறிக்கை :"தேவே கவுடா" வும் "குமார சாமியும்" எனக்கு பில்லி சூனியம் வைத்து விட்டார்கள். எனக்கு மரணம் சம்பவித்தால் அதற்கு அவர்கள் தான் பொறுப்பு.

படித்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடிய வில்லை. இந்த முட்டாளெல்லாம் முதல்வராக, தொடர்ந்தால், மக்களும் முட்டாள்களாகவே இருப்பார்கள். நல்லவேளை. கவுடா கவிழ்த்தார். (கவுடா-கவிழ்த்தது, சரியா என்பது வேறு விஷயம்).

இறைவனும், பேய்களும் இன்னமும் நிரூபிக்கப்படாத கற்பனைகள். இந்த கட்டுக் கதைகளை நம்புபவன் கண்டிப்பாக ஆறறிவு உள்ள மனிதனாகவே இருக்க முடியாது.

2. வட சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பேய்கள் நடமாட்டம். பள்ளி விடுமுறை:

"பள்ளிக் குழந்தைகள் உக்காரும் இடங்களில் எல்லாம் ரத்தம் வருகிறது" என்று கதை விட்டு மக்களை- மாக்கள் ஆக்கியிருக்கிறது ஒரு கும்பல்.

பள்ளிக் குழந்தைகளிடம் "பேய், பிசாசு" என்று எதுவும் கிடையாது - என்று சொல்லி அவர்களின் அறியாமையை போக்கி, நம்பிக்கை தர வேண்டிய பள்ளி நிர்வாகம், அதை விடுத்து, ஒரு பாதிரியாரைக் கொண்டு பூஜை நடத்தி "பேய்களை விரட்டிவிட்டதாக(?!)" அறிவிப்பு செய்கிறது.


"கல்வி இல்லா வீடு இருண்ட வீடென்க" - என்றார் "பாவேந்தர் பாரதிதாசன்". கல்வி என்பது அறியாமையை அகற்றும் விளக்கு.
அறியாமையை புகட்டவா கல்வி?

3. மேற்கண்ட செய்திகளை "தட்ஸ் தமிழ்" இணையத் தளத்தில் படித்தபோது, செய்திகளுக்குக் கீழ் "பின்னூட்டங்களைக்" காண நேரிட்டது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் படித்த "சில அறிவாளிகள்" இவ்வாறு எழுதி இருந்தார்கள்.

"எடியூரப்பா சொல்வதை அலட்சியம் செய்யக் கூடாது. அவர் சொல்வதில் உண்மை உள்ளது. தேவே கவுடா அப்படிப்பட்ட ஆசாமி தான்" - இவ்வாறு ஒரு அறிவுச் சுடர் பிதற்றி இருந்தது - நல்ல நகைச்சுவை.

4. மேற்கு வங்கத்தில் "அபசுதீன்அலி" என்னும் காட்டுமிராண்டி "கடவுள், தன் கனவில் தோன்றி" தன் மகளை திருமணம் செய்து கொள்ள சொன்னார் என்று கூறி, தன் சொந்த மகளையே கர்ப்பமாக்கி இருக்கிறான்.

இதை ஊடகங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாதது வருத்தமான விஷயம். மதம் சம்மந்தப் பட்ட நிகழ்வுகளை "ஊடகங்கள்" அச்சத்துடன் விமர்சனம் செய்வது, ஆரோக்கியமான போக்கு அல்ல. மத நம்பிக்கைகள், பெரும்பாலும் "மட நம்பிக்கைகள்" ஆக இருப்பதை தைரியமாக எடுத்து உரைக்க வேண்டும்.


மதத்தின் பெயரால் "அயோக்கித்தனம்" செய்வது பாதுகாப்பான விஷயம் என்றால், மதம் என்பது மனிதனுக்கு அவசியம் தானா?


இந்த பதிவை நான் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. "அன்னை மேரியின் அபூர்வ ஓவியம் இது. கவனமாய் பாருங்கள். இதை உதாசீனப் படுத்தியவர் வேலை காலி, குடும்பம் மொத்தமும் பரலோகம் போய் விட்டனர். இதை 20 பேருக்காவது அனுப்பினால், உங்கள் வாழ்வில் அதிசயம் நடக்கும். அதை விடுத்து, இந்த மின்னஞ்சலை அழித்தால்............ "

போங்கடா! நீங்களும் உங்க நம்பிக்கையும்!!!

கல்வி கண்ணைத் திறக்கும். கண்ணை மூடுமா? அறிவு அச்சம் தவிர்க்கும். அச்சம் வளர்க்குமா?

வியாழன், மார்ச் 01, 2007

பாய் கடை திண்ணை (3)

காலையில் நான் கண்விழித்ததும், எனக்கு வசவு காத்திருந்தது.
காப்பியை என் கையில் கொடுத்தக் கையோடு, என் தாயார் சற்றுக் கோபத்துடன் ஆரம்பித்தார்.
"டேய்! பின்னாடி வூட்டு கவிதாவுக்கு, நீ லவ் லெட்டர் கொடுத்தியா?"
நான் சகலமும் நடுங்கிப் போனேன். "இது என்னடா புதுக் கரடி?"
எங்கிருந்தோ வந்து, வீட்டுக்குள் நுழைந்த என் தங்கை தான் என்னைக் காப்பாற்றினாள்.
"அம்மா! அந்த லவ் லெட்டர் எழுதுன ஆள கண்டுபுடிச்சாச்சி! புலியூரான் ராஜேந்திரன் தான் அத குடுத்துருக்கான். அவன அடிக்கிறதுக்காக, கவிதா வூட்ல எல்லாரும் தேடிக்கிட்டு இருக்காங்க"
"அப்புறம் ஏன் லெட்டர்ல இருக்கறது ஒங்க அண்ணன் கையெழுத்து மாதிரி இருக்குதுன்னு சொன்னாங்க?"

நான் அந்த லெட்டரப் பாத்தேன். அது அண்ணன் கையெழுத்து இல்ல..."

அம்மா போய்விட்டார். மெதுவாக என் தங்கையிடம் சென்றேன். அவள் என்னைக் கோபத்துடம் நிமிர்ந்து பார்த்தாள்.

"அவனுக்கு ஏன் கவிதை எழுதிக் கொடுத்தீங்க? அவன் நீங்க எழுதிக் கொடுத்த பேப்பர்லயே, மத்ததெல்லாம் சேத்து எழுதிக்கொடுத்திருக்கான்.."

எனக்கு டென்ஷன் எகிறியது. "அடேய்..புலி.."

நேராக, பாய் வீட்டுத் திண்ணைக்குப் போனேன். அங்கே, எனக்காக ஈறு காத்திருந்தான். என்னைக் கண்டதும் அசிங்கமாய் சிரித்தான்.

"அண்ணே! கை குடுங்க...ஒங்க கவிதையை "கவிதா" சூப்பர்னு சொல்லிச்சி"..

எனக்கு வந்தக் கோபத்தில், ஈறுவின் தலையைப் பிடித்து கீழே தள்ளி, அவன் முதுகில், ஆசை தீர கும்மினேன்.

"ஏண்டா நான் எழுதிக் கொடுத்த கவிதை பேப்பர அப்படியே குடுத்தீங்க? புதுசா எழுதிக் குடுத்திருக்கலாம்ல.."

"அண்ணே..ஒங்க கையெழுத்து நல்லா இருந்துச்சி..அதனால தான் ராஜேந்திரன் அண்ணன்..."

எனக்கு கோபம் இன்னும் தலைக்கேறியது."போடி..புலி எழுதுன லவ் லெட்டர், அவங்க அப்பா கைல மாட்டிக்கிச்சி...அவஙக வூட்ல, புலிய தேடிக்கிட்டு இருக்காங்க.. கெடச்சான் அவனுக்கு சங்குதான்டி.."

"நெஜமாவாண்ணே சொல்றீங்க?" என்றவன், புலியூரானைத் தேடிப் போனான்.

அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. புலியூரானைப் பார்க்க முடியவில்லை. எனக்கு ஆர்வம் தாங்க முடியவில்லை. ஈறுவிடம் விசாரித்தேன்.

"என்னடா அருண்..புலி எங்கடா?"

"கவிதா புள்ள அப்பன், ராஜேந்திரன் அண்ணன கூப்டு திட்டிட்டார். அந்த புள்ள என்னடான்னா, ராஜேந்திரன் அண்ணன பாக்க வேணாம்னு சொல்லிடிச்சி.. அண்ணனுக்கு மனசே சரியில்லாம..வீட்டோட இருக்காரு..."

எனக்கு புலி மேல் பரிதாபம் வந்தது.

"புலி, கொட்ட எடுத்த புலி ஆயிடுச்சி போல" என்று சொல்லி என் நண்பன் செந்தில் சிரித்ததை என்னால் ரசிக்க முடியவில்லை.

ஒரு மாதம் சென்றது.

கவிதாவுக்கும், ராசிபுரத்தை சேர்ந்த ஒரு வக்கீலுக்கும் திருமணம் நடந்தது. என்னால் நம்ப முடிய வில்லை. கல்யாணத்திற்கு நானும் சென்றிருந்தேன். கவிதா முகத்தில் பயங்கர வெட்கச் சிரிப்பு. எனக்கு, புலியின் ஞாபகம் வந்து போனது.

இன்னும் ஒரு மாதம் போனது.

ஒரு நாள், புலியூரானும், ஒரு வாட்ட சாட்டமானப் பெண்ணும் சாலையில் சிரித்து பேசியபடி சென்றார்கள். அந்தப் பெண்ணின் கழுத்தில், புதுத் தாலி தொங்கிக் கொன்டிருந்தது. எனக்குப் புரிந்தது. ஈறுவிடம் கேட்டபோது, உற்சாகமாய் பேசினான்.

"ஆமாண்னே.. அண்ணன் போன வாரம் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.. பொண்ணு வீட்லயே கல்யாணம் நடந்துச்சி...அதனால தான், யாருக்கும் சொல்ல முடியல..."

"அப்போ..அந்த கவிதாவ 'லவ்' பண்ணுனது?"

"அடப் போங்கண்ணே..அதெல்லாம் சும்மா டைம்-பாஸ்...இன்னுமா அத நீங்க ஞாபகம் வச்சுருக்கீங்க..அய்யோ...அய்யோ..." வடிவேல் மாதிரி சொல்லிவிட்டு சிரித்தான்.
காதல் பற்றி 'அஆ' கூடத் தெரியாத எனக்கு இந்த சம்பவம் காதலைப் பற்றி இன்னும் குழப்பம் ஏற்படுத்தியது.

(தொடரும்)

செவ்வாய், பிப்ரவரி 27, 2007

பாய் கடை திண்ணை (2)

நான் பார்த்த பார்வையில் ஈறு சற்று பயந்து போனான்.

புலியூரான் (எ) ராஜேந்திரனை எனக்கு அறிமுகப்படுத்தியவன் ஈறு தான். கபடி ஆட்டத்திலும், ஜல்லிக்கட்டு போட்டியிலும் ஈடுபாடு கொண்ட ராஜேந்திரனை, முதன் முதலில் பார்த்தபோது, மிரண்டு போனேன். மலைமாடு மாதிரி வளர்த்தியாய் இருந்தான். என்னைப் பார்த்ததும், 'வணக்கண்ணே!' என்று கூறி, சல்யூட் அடித்தான்.

மூவரும் சற்று நேரம் அமைதியாய் இருந்தோம். ஈறு தான் ஆரம்பித்தான்.

"அண்ணே!.. ராஜேந்திரன் அண்ணன் லவ் பண்றார். உங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கிற "கவிதா" வை அண்ணன் மடக்கிட்டாரு..". சொல்லிவிட்டு, கண் சிமிட்டி சிரித்தான்.

எனக்கு ஆத்திரமாய் வந்தது. +1 படிக்கும் சின்னப் பெண், 5 ஆவது கூடத் தாண்டாத இவனைப் பார்த்து எப்படி மயங்கினாள்? காதலைப் பற்றி 'அஆ' கூடத் தெரியாத எனக்கு, மனம் குமைந்தது.

ராஜேந்திரன் தொடர்ந்தான்.
"அண்ணே! நீங்க நல்லா கவிதை எழுதுவீங்களாமே! புக்ல கூட வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன்..எனக்கு ஒரு காதல் கவிதை எழுதிக்குடுங்க...கவிதாவுக்கு கவிதைனா உயிர்."

"முடியாது போடா" என்று கத்த நினைத்தேன்.ஆனால், ராஜேந்திரனின் புகழ்ச்சி, என்னைத் தடுமாற வைத்து விட்டது.

"இல்ல..ராஜேந்திரா..எனக்கு காதல் கவிதை எழுத வராது..இதுவரைக்கும் நான் காதல் கவிதை எழுதியதில்லை."

ஈறு இடைமறித்தான். "உங்களால முடியும்ணே..".

பேப்பர் கொண்டு வந்து கொடுத்தார்கள். நானும் பேனாவை எடுத்து வைத்துக் கொண்டு யோசிப்பது போல் நடித்தேன். அப்புறம், எழுத ஆரம்பித்தேன்.

கரையும், அலையும்
இருந்தால் தான் கடல்.
உயிரும், உணர்வும்
இருந்தால் தான் உடல்.
எண்ணமும், எழுத்தும்
இருந்தால் தான் மடல்.
அன்பே! நீயும், நானும்
இணைந்தால் தான் காதல்.

கவிதையை(?!) படித்து விட்டு, ராஜேந்திரன் துள்ளினான். "அண்ணே..இது தான் கவித..கவித.." என்று புல்லரித்தான்.
என் கையிலிருந்த கவிதை காகிதத்தை, ஏறக்குறைய உருவிக் கொண்டு போயினர் ஈறும், புலியூரானும்.
பிறகு தான், எனக்கு வினையே ஆரம்பித்தது.
(தொடரும்)

திங்கள், பிப்ரவரி 26, 2007

பாய் கடை திண்ணை (1)

பாய் கடை திண்ணையில் அமர்ந்து, போகிற, வருகிற பிகர்களை நான் மேற்பார்வை செய்து கொண்டிருந்த போது, எங்கிருந்தோ, தனது சைக்கிளில் புயல் வேகத்தில் வந்த 'சிம்காக்ஸ்' (எ) சரவணன், என்னிடம் அந்த தகவலை சொன்னான். கேட்டதும், எனக்கு சற்று படபடப்பு உண்டானது.
"அப்படியா?" என்றேன் அவனிடம்.


"ஆமாண்ணே! ஏரியில 'ராக் போர்ட் கிரிக்கெட் கிளப்' மீட்டிங் நடக்குது. உங்கள வேணாம்னு சொன்னது, 'முத்துக்குமார்' அண்ணன் தான்." சொல்லி முடித்துவிட்டு, "எனக்கு டியூசன் இருக்குது, வரண்ணே!" என்று கூறி, சிட்டாய் பறந்து விட்டான்.

எனக்கு அவமானத்தில் அழுகையே வந்து விட்டது.

அடப் பாவிகளா! போன வருஷம் நடந்த டோர்னமெண்டில், என்னை ஓப்பனிங் இறங்க வைத்து விட்டு, இந்த வருஷம் நான் வேண்டாமா?

அதிலும் சென்ற வருடம் தம்மம்பட்டியில் நடந்த டோர்னமெண்டில், ஆத்தூர் 'சைலண்ட் ஸ்ட்ராம்' அணிக்கு எதிராக என்னை ஓப்பனிங் இறக்கினார்கள். ஜல்லிக்கட்டு காளை போல, தறிக் கெட்டு ஓடி வந்து ஓப்பனிங் பவுலிங் செய்த ஆறுமுகம் வீசிய கார்க் பந்து, என் இடது கால் கட்டை விரலை பதம் பார்த்தது. ரத்தம் சொட்டிய நிலையிலும் அடாது நின்று, ஆறுமுகத்தின் பந்துகளை (கால் கொண்டு) தடுத்தாடி, அவனுடைய 3 ஓவர்களை நிறைவு செய்து, 0 ரன்கள் எடுத்து அவுட் ஆனேன்.


எனக்குப் பின்னே வந்த மட்டையாளர்கள், ரன்களைக் குவித்தனர்.
ஒவ்வொரு போட்டியிலும் 5 விக்கெட்டாவது எடுக்கும், ஆறுமுகம் அன்று 2 விக்கெட்டுகள் தான் எடுத்தான். அதற்கு நான் தான் காரணம்.


அன்றைக்கு, என்னை தலையில் வைத்துக் கொண்டாடிய அணி, இன்று, என்னை வெளியே தள்ளி விட்டது, எனக்கு தாங்கொண்ணா துயரம் அளித்தது.

எதிரே, என் தற்கொலைப் பிரிவைச் சேர்ந்த, ஈறு (எ) அருண், வேகவேகமாய், நடந்து வந்து கொண்டிருந்தான். கிரிக்கெட்டில் நடந்த, பல்வேறு, சுவையான தகவல்களை நான் அவ்வப் போது அவிழ்த்து விடுவதால், எனக்கு நிறைய விசிறிகள் இருந்தனர். அவர்கள், நான் எப்போதாவது கிரிக்கெட்டில் அடிக்கும் ஸ்கொயர் ஷாட், கல்லி ஷாட் - களை பாராட்டிப் பேசுவார்கள்.

"என்னடா அருண்?" என்றேன்.

அண்ணே! உங்கள, டீம வுட்டு தூக்கிட்டாங்கண்ணே!" என்றான் சோகத்தோடு. "என்னையும் தூக்கிட்டாங்க" என்றான் கூடுதலாக.


பெரும் துக்கத்தில் ஆழ்ந்தேன். "விடுங்கண்ணே! நாம ஒரு புது டீம் ஆரம்பிச்சுடலாம்" என்று ஆறுதல்(படுத்தினான்) அருண்.

'சட்' டென்று அவனை நிமிர்ந்துப் பார்த்தேன்.

(தொடரும்)

வியாழன், பிப்ரவரி 15, 2007

பெண்

'பெண்ணீயம்' குறித்து எழுத்தாளர் 'பிரபஞ்சன்' அவர்கள், நிறைய படைப்புகளைத் தந்துள்ளார். குறிப்பாக இதிகாச கதைகளில் பெண்கள் கேவலப் படுத்தப்பட்டிருப்பதை கோபத்தோடு விளக்கியுள்ளார்.

என் நண்பர் சிவசங்கரன், மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். நிறைய பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு கலக்கியுள்ளார். ஆனால், மனிதருக்கு கோபம் அதிகம். எதிரில் இருப்பவர் யாராக இருந்தாலும், கோபம் வந்து விட்டால் 'பழுக்க காய்ச்சிய' வார்த்தைகளை உமிழ்ந்து விடுவார். உண்மையில் இளகிய மனம் படைத்தவர்.

அன்று கல்லுரியில் பட்டிமன்றம் ஒன்று நடந்தது. தலைப்பு 'வரதட்சணைக்கு காரணம் ஆண்களா? பெண்களா?'.

'பெண்களே' என்னும் தலைப்பில் வாதாடும் ஆண்கள் குழுவில் நண்பர் சிவசங்கர் இடம் பெற்றிருந்தார். 'ஆண்களே' என்ற தலைப்பில் வாதாடிய பெண்கள் குழுவில் அந்த புதிய 'தமிழ் ஆசிரியை' (பெயர் வேண்டாமே!), முதல் முறையாக கலந்து கொண்டார்.

'புதிய தமிழ் ஆசிரியை' யின் முறை வந்தது. மிகவும் கோபத்துடன் பேசினார்.

'வரதட்சணைக் கொடுமைக்கு காரணம் ஆண்களே. வரதட்சணை கேட்கும் ஆண்களை நிற்க வைத்து சுட்டுத் தள்ள வேண்டும்.பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் மரியாதை இல்லை. தேசிய கவி என்று போற்றப் படும் பாரதியார் கூட 'கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதிலும், அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!' என்று பெண்களின் உடற்கூறு கொண்டு பாடியிருக்கிறான்.'

(இங்கே, நான் ஒரு விசயத்தை சொல்ல வேண்டும். சிவசங்கர் 'பாரதியாரின்' தீவிர விசிறி. அவர் பாடல்கள் என்றால், இவருக்கு மிகவும் பிரியம். புதிய ஆசிரியை இவ்வாறு பேசியதும், சிவசங்கர் கோபத்துடன் எழுந்து 'மைக்கை'ப் பிடித்தார்.)

'எதிரணியைச் சேர்ந்த ஏ.கே- 47 அவர்களே..(மாணவர்களின் பலத்த கரகோஷம் .புதிய ஆசிரியையின் முகம் வாடிப் போகிறது.) பாரதியார் எந்த சூழ்நிலையில் இப்படி பாடினார் தெரியுமா? ஆங்கிலேயர்கள், தங்களுக்கு கப்பம் கட்ட மறுத்த தமிழ் நாட்டு மன்னர்களை மடக்க, அழகிய பெண்களை தூதாக அனுப்பி அம்மன்னர்களை தம் வயப்படுத்தி, ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டச் செய்தனர். 'ஆங்கிலேயர்கள் அனுப்பும் மங்கையரைக் கண்டு மயங்கக் கூடாது' என்னும் பொருள்படும் படி தான் பாரதியார் இவ்வாறு பாடினாரே ஒழிய, ஒட்டு மொத்தப் பெண் இனத்தையும் கேவலப்படுத்த அல்ல.

மேலும், பாரதியார் பெண்கள் பற்றி மிகவும் உயர்வாகத் தான் பாடியுள்ளார். 'மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்' என்னும் வரிகளே அதற்கு சாட்சி.'

இவ்வாறு சிவசங்கரன் பேசி முடித்ததும், பலத்த கரகோஷம் எழும்பியது. மாணவர்கள், புதிய ஆசிரியைப் பார்த்து 'ஏ.கே.47, ஏ.கே.47' என்று நையாண்டி செய்தனர். ஆசிரியையின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. யாரும் பாராதபோது, கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துகொண்டார்.


ஆனால் இதை சிவசங்கர் கவனித்து விட்டார். கோபத்தில் அவர் சொன்ன வார்த்தை தவறு என்று உணர்ந்தார். பின்னர் தனிமையில் ஆசிரியையை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இருவரும் நண்பர்களாயினர்.