கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன் நான் தீவிர மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். மூச்சு சட்டென்று நின்று போய்விடுமோ என்ற தேவையற்ற பயம் என்னை பலமாக பீடித்திருந்தது. நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்பட்டு பயப்படுத்தும். கையில் நாடி ஒழுங்காகத் துடிக்கிறதா என்று அடிக்கடி சுய பரிசோதனை செய்துகொள்வேன். பஸ்ஸில் பயணம் செய்யும்போது நெஞ்சு அடிக்கடி அடைப்பதுபோல் உணர்வு ஏற்பட்டு, தலையை மேலும், கீழும் ஆட்டிக்கொள்வேன். யாராவது அப்போது என்னைப்பார்த்தால், அந்த ஆளைக் கொல்லவேண்டும் என்ற வெறி ஏற்படும். பஸ்ஸை விட்டு இறங்கி ஓட யத்தனித்து, பலமுறை கண்டக்டர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல், இறங்கி வேறு பஸ் பிடித்து வீட்டுக்கு வந்துவிடுவேன்.
அப்போதெல்லாம்,என்னை ஏகப்பட்ட மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று வைத்தியம் பார்த்தார்கள்.அவர்களில் பெரும்பாலானோர் எனக்கு பயம் இருப்பதாகக் கூறி அல்ப்ராக்ஸ் மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். நோய் எனக்கு தீர்ந்தபாடில்லை. நாளாக, நாளாக எனக்கு நோய் அதிகரித்துக்கொண்டே வந்தது. எல்லோரிடமும் பேசுவதை நிறுத்திக்கொண்டேன். சோற்றைக்கண்டால் வெறுப்பாக வரும். மீறி சாப்பிட்டால், கழுத்து நரம்புகள் இறுக்கிக்கொள்ளும். விழுங்க முடியாது. எனக்கு நம்பிக்கை சுத்தமாகப் போய்விட்டது. வீட்டைவிட்டு வெளியில்கூட வராமல் வீட்டிலேயே அடைந்துக்கிடந்தேன். விரைவில் நான் இறந்துவிடுவேன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.
கடைசி முயற்சியாக என்னை ஒரு சாமியாரிடம் கூட்டிச்சென்றார்கள். அந்த ஆள் ஒரு எலுமிச்சைப் பழத்தில் சூடம் ஏற்றி, அதை உற்றுப்பார்க்கச் சொன்னான். என்னால் அதில் கவனம் செலுத்திப்பார்க்கமுடியவில்லை. அப்புறம் தாயத்து ஒன்று கொடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ளச் சொன்னான். தூக்கத்தில் அந்தத் தாயத்து என் இடுப்பைப் பதம் பார்த்தது மட்டுமே அதனால் ஆன பலன். பிறகு, என்னை குணசேகரம் என்ற ஊருக்கு அழைத்து சென்று, அந்தக்கோயிலில் பைத்தியங்களுக்கு முகத்தில் தெளிக்கும் நீரை என் முகத்தில் தெளிக்க வைத்தார் என் மாமா ஒருவர். எனக்கு அது அவமானமாக உணர்ந்தேன். அவரிடம் சண்டை போட்டுக் கத்தினேன். மீண்டும் முகத்தில் தண்ணீர் தெளித்தாகள். அந்தக்கோயிலில் இசைக்கப்பட்ட வாத்தியங்களில் அதிர்வுகள் தாங்காமல் வெளியே ஓடி வந்துவிட்டேன். “ பாத்தியா, பைத்தியங்களால இந்தக்கோயில் சாமி முகத்தை ரொம்ப நேரம் பாத்துக்கிட்டு இருக்கமுடியாது. அது தான் நீ ஓடி வந்துட்ட” என்று சொல்லி என் மாமா என்னை மேலும் வெறுப்பேற்றினார்.
ஊரிலிருந்து ஒருநாள் என் மாமா மகன் செந்தில் குமார் (இப்போது இவர் என் தங்கையின் கணவர்) வந்திருந்தார். அவர் என்னிடம் ஒரு புத்தகத்தைக்கொடுத்துப் படிக்கச்சொன்னார். அது டாக்டர் ருத்ரன் எழுதிய “மனநோய் - சிகிச்சை முறைகள்” என்னும் புத்தகம். அப்போது எனக்கு என் மாமன் மகன் மீது பயங்கரக் கோபம் வந்தது. புத்தகத்தைத் தூக்கி எறிந்தேன். ஒரு மணி நேரம் கழித்து என் கோபம் தணிந்தது. அப்படி அந்தப் புத்தகத்தில் என்னதானிருக்கிறது என்ற ஆவலில் அதைப்படிக்க ஆரம்பித்தேன்.
முற்றிலும் பிரக்ஞையின்றி, சட்டையைக்கிழித்துக்கொண்டு ரோட்டில் திரிபவர்களை மட்டுமே பைத்தியம் என்று நான் நினைத்திருந்தேன். மனதில் ஏற்படும் குழப்பங்கள் கூட ஒருவரை மனநோயாளி ஆக்கிவிடக்கூடும் என்பதை படித்தபோது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. மிகத்தெளிவானத் தமிழில் அழகாக, மனநோய்களின் வகைகளையும், அவற்றின் குறியீடுகளையும் தெளிவாக விளக்கியிருந்தார் டாக்டர் ருத்ரன் அவர்கள். எனக்கு வந்திருப்பது தீவிர மனசோர்வு நோய் என்பதை, அந்தப் புத்தகத்தின் மூலம் அறிந்துகொண்டேன்.
அன்று அலுவலகத்திலிருந்து வந்த என் தந்தையிடம் சென்று கேட்டேன். “நான் கடைசியா ஒரு சைக்கியாட்ரிஸ்ட்ட பாக்கலாம்னு நெனைக்கிறேன்”. அவர் சற்று இகழ்ச்சியாக என்னைப்பார்த்துக்கேட்டார். “சைக்கியாட்ரிஸ்ட்னா, பைத்தியக்கார டாக்டர் தான?”. நான் சொன்னேன் “டாக்டர் பைத்தியக்காரர் கிடையாது. அவரைப்பாக்கப் போறவங்கதான் பைத்தியம்”. அவர் தன் நண்பர்களிடம் கேட்டறிந்து சேலத்தில் அப்துல் ஜப்பார் என்ற டாக்டரிடம் என்னைக்கூட்டிச்சென்றார். அப்புறம் நடந்ததெல்லாம் அற்புதம்.
இன்றைக்கு நான் மென்பொருள் துறையில் பணிபுரிகிறேன். பூனாவில் குடும்பத்தோடு வசிக்கிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மாத சம்பளம் 80,000 ரூபாய். என் ஊரார் என்னைக்கண்டு வியக்கிறார்கள். என் குணமே மாறிவிட்டது. (பிகேவியர் மாடிஃபிகேசன் தியரி மூலம்). எனக்கு இப்போது எந்தப்பிரச்சினையும் இல்லை.
என் வாழ்க்கையை எண்ணிப்பார்க்கும்போது, எனக்கு ஒரு நல்ல வழி காட்டியது டாக்டர் ருத்ரன் எழுதிய “மனநோய் - சிகிச்சைமுறைகள்” புத்தகம் தான் என்று அறுதியிட்டு சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கவேண்டியப் புத்தகம் அது.
இதுவரை நான் டாக்டர் ருத்ரன் அவர்களை சந்தித்ததில்லை. ஒருமுறை அவரைச் சந்திக்க கோடம்பாக்கம் பாலத்தின் கீழிருக்கும் அவரின் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் அப்போது அவர் அங்கு இல்லை.
இதோ இந்தக்கட்டுரை வழியாக, என் மனமார்ந்த நன்றியை டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு உரித்தாக்குகிறேன்.