வெள்ளி, அக்டோபர் 10, 2008

செல்வி. பெ.சௌம்யா - ஒரு இம்சை அரசி அறிமுகம்



இன்றையத் தேதிக்கு, செல்வி பெ.சௌம்யாவின் வயது மூன்று ஆண்டுகள் மற்றும் 53 நாட்கள். ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி, அவரைப் பள்ளிக்குக் கூட்டிச்சென்றார் சௌமியாவின் தந்தை. சுட்டி டிவியில் வரும் ’டோராவின் பயணங்கள்’ தொடரின் தீவிர ரசிகரான சௌமியா, தன் தந்தையிடம் ’அய்யா, குள்ளநயி வவுமா? என்றார். ’வராது கண்ணு. வந்தா திருடக்கூடாது குள்ளநரின்னு சொல்லிடலாம்’ என்று சொன்னார் அவரின் தந்தை. ஹோண்டா ஸ்ப்லெண்டர் ப்ளஸ் வண்டியின் பெட்ரோல் டேங்கர் மேல், தன் தாயாரால் உட்கார வைக்கப்பட்டார் செல்வி. பெ.சௌம்யா அவர்கள்.

‘பாப்பா, எங்கப்போறீங்க தெரியமா? என்று தன் தாயார் கேட்டதும், “ஃபூலுக்கு’ என்றார் சௌ. ‘அங்கபோயி அடம் பண்ணக்கூடாது. உச்சா வந்தா, பாத்ரூம் எங்கன்னு கேட்டு போகணும். சரியா?’ ‘சரிம்மா’ என்று சொல்லி தலையாட்டினார் சௌ. மேலும், அம்மாவுக்கு டாட்டா காட்டிவிட்டு, ‘அய்யா, போலான்யா’ என்று கத்தினார். வண்டி புறப்பட்டது.

பள்ளி செல்லும்வரை, தெருவை வேடிக்கைப்பார்த்துக்கொண்டு வந்தவர், பள்ளியை நெருங்கியதும், சற்றே சீரியஸானார். ’விஸிடெக் அகாடமி’ என்னும் வரவேற்புப்பலகையை விசித்திரமாகப் பார்த்தவாறே, வண்டியிலிருந்து இறக்கப்பட்டவர், ‘அய்யா, டூக்கு’ என்று சொல்லி, கைகள் இரண்டையும் மேலே தூக்கினார். ‘அடடா, நடந்து வாம்மா’ என்று சொல்லிக்கொண்டே அவரைத் தூக்கிக்கொண்ட தந்தை, பள்ளியின் வாயில் நோக்கி நடந்தார்.

‘ஆயியே..’ என்று அவர்களை வரவேற்றுப்பேசினார் தலைமையாசிரியை. ‘ஆஜ் ஜல்தி ஆயியே..கியாரா..பாரா பஜே பர். க்யோங்கி, ஸ்கூக் கேலியே ஏ நயா ஹை நா?’ தன் அரைகுறை ஹிந்தி அறிவை வைத்துப் புரிந்து கொண்டார் செல்வி.சௌமியாவின் தந்தை. அதாவது, செல்வி. சௌ அவர்கள் பள்ளிக்குப் புதியவராம். அதனால், சீக்கிரமாக - அதாவது 11 அல்லது 12 மணிக்குள் சீக்கிரம் வந்து கூட்டிச்செல்ல வேண்டுமாம்.

‘டீக் ஹை மேடம்’ என்றார்.

‘ஆவோ பேட்டா’ என்று சொல்லி தலைமையாசிரியை கையை நீட்டியவுடன், ’வீல்’ என்று அலறிக்கொண்டு தன் தந்தை மீது பாய்ந்தார் செல்வி சௌ. அவரைத்தூக்கித் தோளில் போட்டு, முதுகில் தட்டிக்கொடுத்தபடியே அவரின் தந்தை சொன்னார். ‘அழுவக்கூடாது. நிறுத்து’. ‘அய்யா.அய்யா...’ என்று தேம்பித்தேம்பி அழுத சௌமியாவை, தட்டிக்கொடுத்தார் சௌவின் தந்தை.

‘இன்கோ ஹிந்தி நஹி ஆத்தா ஹை க்யா?’ என்று கேட்ட த.ஆ.விடம், ‘நஹி மேடம். சிர்ஃப் தமிழ் ஆத்தா ஹை’ என்றார் அவரின் தந்தை.

’ப்ரதீபா’என்று குரல் கொடுத்தார் த.ஆ. உள்ளே இருந்து வந்த ப்ரதீபா (நர்சரி வகுப்பின் ஆசிரியை) செல்வி சௌமியாவை, அவரின் தந்தையிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துச்சென்றார். கதவு சாத்தப்பட்டது. உள்ளேயிருந்து செல்வி.சௌ.வின் அழுகைக் குரல் தெளிவாகக்கேட்டது.

இரவு அலுவலகத்திலிருந்து வந்த தந்தையைக் கண்டவுடன் உற்சாகமானார் சௌ. அவரின் தந்தை ஆடையை மாற்றும்போது லுங்கி கொண்டு வந்து கொடுத்தார்.

அசதியில் சோஃபா மீது அமர்ந்த தந்தையின் தோளில் உட்கார்ந்துகொண்டார் சௌ. ‘கண்ணு, அய்யாவ தொந்தரவு செய்யாத, பாவம் அவளே (?!) களச்சிப்போயி வந்துருக்கா’ என்றபடி அவருக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார் சௌமியாவின் தாயார்.

செல்வி சௌமியாவிடம் ‘கண்ணு, உனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கா?’ என்ற தந்தையிடம் ‘இல்லய்யா’ என்று தலையை இடம்வலமாக ஆட்டினார் சௌ. ‘ஏம்மா, புடிக்கல?’ பதில் சொல்லத்தெரியாமல் சிரித்தார் சௌமியா. ‘அவங்க ஹிந்தியில பேசுறது, இவுலுக்கு புரியாது இல்லயா. அது தான், பிடிக்கலைன்னு சொல்றா போலருக்கு’ என்றார் தாயார்.

தனக்குப்புதிதாகக் கொடுக்கப்பட்டப் பாடப் புத்தகங்களை பிரித்து ஆர்வமாகப்பார்த்த சௌ. ’இது என்னாய்யா?’ என்று ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தார். எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டே வந்த செல்வி.சௌமியாவின் தந்தை, திடீரென அவரிடம், ‘கண்ணு, அய்யா, எங்க போய்ட்டு வர்றாரு?’
’ஆபீஸ்’
‘பாப்பா?’
‘ஃப்பூல்”
’அய்யா?’
’ஆஃபீஸ்’
’பாப்பா’
‘ஃபூல்’

மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்தார் சௌமியாவின் தந்தை.

கேட்டுக்கொண்டே வந்த சௌமியாவின் தாயார், ‘ஏண்டி அழிச்சாட்டி (அழிச்சாட்டியம் செய்கிறவர்) புள்ளய நக்கல் பண்ற?’ என்று சொல்ல, ‘அம்மா, அய்யா நக்கல் மா’ என்று சொல்லி சிரித்தார் சௌமியா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக