புதன், அக்டோபர் 08, 2008

2011-ல் நம்பர்-1 இலக்கியவாதி யார்?

வேறு யாருமில்லை, அடியேன் தான். எதற்கு சிரிக்கிறீர்கள்? சாதாரணத் தமிழில் எழுதுபவன் எப்படி இலக்கியவாதியாக முடியுமென்றா?

2011-ல் ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், ரித்தீஷ் இவர்களெல்லாம், தமிழகத்தின் முதலமைச்சர் ஆக முடியுமென்றால், என்னால், தமிழில் நம்பர் 1 இலக்கியவாதியாக முடியும்தானே? (நீ ‘இலக்கியவியாதியாகத்தான் முடியும் என்று நீங்கள் நினைப்பது, எனக்குத் தெரியும்).

சரி, அரசியலில் நுழையத்தான் எந்த விதமானத் தகுதியும் அவசியமில்லை. ஆனால், இலக்கியத்திற்கும் அப்படித்தானா? அப்படியில்லை.

எனில், நான் இலக்கியவாதியாக மாற எடுத்துக் கொண்ட பயிற்சிகள் யாவன?

1. இதுவரை நான் தமிழில் ஒரு சிறுகதைகூட எழுதியதில்லை. (இது எப்படி தகுதியாகும் என்று நீங்கள் கேட்கலாம். தமிழைக் கொலை செய்து-அந்தப் பாவத்தை நான் இதுவரை சுமந்ததில்லை)

2. எனக்கென்று ஒரு இணையத்தளத்தைத்திறந்திருக்கிறேன். (பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் சிலேட்டில் எழுதப்பழகுவதைப்போல, இணையத்தில் இலக்கியம் எழுதப்பழகுவது சாலவும் நன்று என்கிறார் இணைய முன்னோடி ஒருவர்)

3. என்னுடைய நண்பர்கள் நிறையபேர் என்னுடைய எழுத்தை ரசிக்கிறார்களென்பது என் தாழ்மையான அபிப்ராயம் (ஒவ்வொரு முறை - இடுகை (அ) மொக்கைப்பதிவு இடும்போதெல்லாம், என் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி தெரிவிப்பேன். பிறகு அபிப்ராயம் கேட்பேன். பெரும்பாலும், அவர்களின் பதில் இவ்வாறே அமையும் - “ஏன் ஆஃபீஸில் இப்பெல்லாம் வேலையே தர்றதில்லையா?”)

4. இலக்கியமென்றால் என்னவென்று தெரியாமல் கொஞ்ச நாள் தெரு பொறுக்கிக்கொண்டிருந்தபோது, திவாகரன் தம்புவிடம் சென்று, இலக்கியமென்றால் என்னவென்று கேட்டேன். அது ஒரு காலம் காட்டும் கண்ணாடி என்றார். (ஆக, இலக்கியமென்றால், அடியேனுக்கு என்னவென்று தெரியும்)

5. இலக்கியவாதி யார்? (இது தான் எனக்கு பதில் தெரியாத கேள்வி. என்றாலும், நான் சில அனுமானங்களை வைத்திருக்கிறேன். சில கலைச்சொற்களை அடிக்கடி தன் எழுத்தில், ஆங்காங்கே போட்டு நிரப்பும் வல்லமை வேண்டும்.பின் நவீனத்துவம்,விளிம்பு, கட்டுடைத்தல், இருத்தலியம், படிமம், கூறு, அவதானம், உள்ளீடு...போதாதா அய்யா?)

6. அரசியல்வாதிகளுக்கு விழும் திட்டுபோலவே, சமயத்தில் இலக்கியவாதிகளுக்கும் நிகழுமென்பது எனக்குத் தெரியும். (என் பரம்பரை பற்றி அவதூறாக யாராவது திட்டினால், “காய்ச்ச மரம் தானே கல்லடிபடும்” என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வேன்)

7. யாராவது என்னை வணிக எழுத்தாளன் என்று சொன்னால், எனக்கு கொலைவெறி கிளம்பிவிடும். (நிற்க, என் எழுத்தை மக்கள் பரவலாகப்படித்தால் தானே, நான் அவ்வாறு சொல்லிக்கொள்ள முடியும். என்றாலும், என்னை நீங்கள் இலக்கியவாதி என்று அழைத்தால், நான் பரவசப்படுவேன்.)

ஆகவே, என்னையும் ஒரு இலக்கியவாதியாக கருதி, என் எழுத்துக்களை நீங்கள் படிக்கவேண்டுமாய், தமிழ் கூறும் இணைய உலகத்தை, வேண்டி, விரும்பி கேட்டுக் கொல்கிறேன் (கொள்கிறேன் அல்ல!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக