திங்கள், மே 10, 2010

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்

வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸாகும் பெரிய பேனர் தமிழ்த்திரைப்படங்கள் இப்போதெல்லாம் பூனாவிலும் கிட்டத்தட்ட 6 மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். தினசரி 1 காட்சி தான். மூன்று நாட்களுக்குப் பிறகு, எல்லா தியேட்டர்களிலும் படம் தூக்கப்பட்டு, எதாவது 1 தியேட்டரில் மட்டும் மேலும் 4 நாட்கள் ஓடும். இந்த புதிய உத்தி நல்ல பயன்கொடுக்கிறது என்றுதான் நினைக்கிறேன். பூனா மிகச்சிறிய நகரம் என்பதால், உங்கள் வீடு இருக்கும் 1 கிலோ மீட்டர் தொலைவிலேயே ஒரு தியேட்டரில் புதிய திரைப்படங்கள் ரிலீஸாகக் கூடும். சனி, ஞாயிறு இரு நாட்களிலும் அரங்கங்கள் நிரம்பி விடுகின்றன. ஏதோ தமிழ் நாட்டில் படம் பார்ப்பது போன்ற ஒரு சந்தோசம். ஆனால், திரைப்படங்கள் அந்த இரண்டரை மணி நேரத்தில் சந்தோஷம் தருகின்றனவா என்பது வேறு விஷயம். அங்காடித் தெரு, பையா இரண்டும் வெவ்வேறு மாதிரியான திரைப்படங்கள். இரண்டுமே நான் ரசித்துப்பார்த்தேன். சுறா பார்க்க இருந்த சமயத்தில், வேட்டைக்காரனை ஞாபகப்படுத்தி என் மனைவி என்னை மருட்சியுறச்செய்யவே, முழுவதும் பின்வாங்கினேன். மனைவி சொல்லே மந்திரம் என்பதை சொன்னவர் கண்டிப்பாக ஒரு மகான்தான் என்று உணர்ந்துகொண்டேன். சகபதிவர்கள் ”டேய் சுறாடா....” என்று விமர்சனத்தில் அலறி, என் மனைவியின் கூற்றை உண்மையாகினார்கள். அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.




முந்தாநாள் கூட, என் மனைவியிடம் “இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்” போலாமா என்று கேட்டபோது, பின்வாங்கினாள். நான் அப்போதே சுதாரித்துக் கொண்டிருக்கவேண்டும். ”கௌபாய்படம்” என்ற ஒரு வார்த்தையே என்னை தியேட்டருக்கு இழுக்கும் மந்திரக்கயிறு போலாகியது. தனியாகவே படம் பார்க்கக் கிளம்பிவிட்டேன். என் பெரிய மகளிடம் “ஆஃபீஸில் இரவு வேலை இருப்பதாக” பொய் சொல்லி கிளம்பினேன். வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் “கராடி பாலிவுட் ஈ-ஸ்கொயர்” மல்டிப்ளக்ஸ். தியேட்டர் (ஸ்க்ரீன்னு சொல்றது தான் லேட்டஸ்ட் ஃபேஷன்) கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல். சரியாக இரவு 8:50 க்கு படம் ஆரம்பித்தது.

படத்தின் ஆரம்பக்காட்சி ரொம்ப சீரியஸாக இருந்தது. டெக்ஸாஸ் முள்ளங்கி என்ற வைரம் காணாமல் போனதற்கு சிங்காரம்(லாரன்ஸ்) தான் காரணம் என்றும், அவரைத் தூக்கில் இடவேண்டுமென்றும் காட்சிகள் ரொம்ப இழுவையாக இருந்தன. எப்படா, இந்த கோர்ட் சீன் முடியும் என்று தோன்றியது. சிங்காரத்தை தூக்கிலிடும் சமயத்தில் அவரைக் காப்பாற்றுகிறார்கள் மௌலி,இளவரசு, ரமேஷ் கண்ணா மற்றும் வையாபுரி. ஜெய்சங்கர்புரம் என்ற ஊரிலிருந்து அவர்கள் வருவதாகவும், அவர்களின் ஊரில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த சிங்கம் (இவரும் லாரன்ஸ் தான்) கொஞ்ச நாட்களாக காணவில்லை எனவும், அதனால் ஊரில், இரும்புக்கோட்டை கிழக்குக்கட்டை ஆட்களின் அராஜகம் எல்லை மீறி விட்டதாகவும், எனவே, சிங்காரம் சிங்கமாக நடித்தால், எதிரி ஓடிவிடுவார்கள் என்றும், அதே சமயத்தில் ஜெய்சங்கர்புரத்தில் இருக்கும் மாரியம்மன் சிலையின் கழுத்திலிருக்கும் டெக்ஸாஸ் முள்ளங்கி போன்ற வைரத்தை சிங்காரத்திற்கு பரிசாகத் தருவதாகவும் சொல்கிறார்கள் (மூச்சு வாங்கிக்கிறேன் சாமிகளா...)

அவர்கள் சொன்னதை நம்ம்ம்ம்ம்பி ஜெய்சங்கர்புரம் செல்கிறார் சிங்காரம். அங்கே சென்று அவர் தன்னை சிங்கம் என்று அந்த ஊர் மக்களை நம்ப வைக்கிறார். உடனே ஒரு பாட்டு. எனக்கு தலைவலி அதிகமாகியது. சாரு நிவேதிதா ஒரு முறை சொன்னதுபோல், பாதி படத்திலேயே எழுந்து ஓடிவிடலாமா என்று தோன்றியது. என்னதான் நடக்குமென்று பார்க்கலாமே என்று நம்பிக்கையோடு உட்கார்ந்துவிட்டேன்.

கிழக்குக்கட்டை நாசரிடமிருந்து, போலி சிங்கம் எப்படி ஜெய்சங்கர்புரத்தைக் காப்பாற்றுகிறது என்பது தான் கதை. நடுவே செவ்விந்தியர்கள் கூட்டம், புதையல் வேட்டை என்று ஜாலியான சமாச்சாரங்களும் உண்டு. அப்புறம்,ஹீரோயின்கள் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். பத்மபிரியா தான் நாயகி. “உடைந்தது அவன் மண்டை மட்டும் இல்லை” என்று அடிக்கடி அவர் லாரன்ஸிடம் சொல்லும்போதெல்லாம், தியேட்டரில் ஒரு கலீஜான கமெண்ட் கேட்டிக்கொண்டேயிருந்தது.தக்காளி சூப் எப்படி வைப்பது என்று ரஸிகர்களுக்கு சமையல் குறிப்பு தருகிறார். ஒரு பாட்டுக்கு ஆடுகிறார். அப்புறம் எங்கே போனார்ன்னு தெரியவில்லை. வழக்கம்போல் கிளைமாக்ஸில் ஹீரோவுடன் குதிரையில் தொற்றிக்கொள்கிறார்.

ராகவா லாரன்ஸ் முடியெல்லாம் வளர்த்துக்கொண்டு, கௌபாயாக வருகிறார். கண்களில் ஒரு காந்தம் இருக்கிறது. ரஜினிகாந்த் மாதிரி கண்ட இடத்தில் தீக்குச்சியை உரசி நெருப்பை வரவழைக்கிறார். விஜய்க்கு சரியான போட்டி (தீக்குச்சிகளை பொருத்தவைப்பதில்).

அப்புறம் லட்சுமிராய். வில்லன் நாசரின் வலதுகண்ணாக வருகிறார். பெரும்பாலும் தொடை காட்டுகிறார். வெள்ளைக்காரி நீ என்னும் பாடலில், தன் அனாடமியை ரசிகர்களுக்குக் காட்டுகிறார். அருகில் படம் பார்த்துக்கொண்டிருந்த 2 விடலைகள் பேசிக்கொண்டது. ”பாத்தியா, என்னா ஃஃபிகரு, சும்மாவா டோனி கவுந்தான்?” இவர்களாவது பரவாயில்லை. ஒரு காட்சியில் வையாபுரி குதிரையில் சவாரி செய்யும் லட்சுமிராயைப் பார்த்து சொல்கிறார். “ஒரு குதிரை, இன்னொரு குதிரை மேல சவாரி செய்யறதை இப்பதான் நான் பாக்கிறேன்”...

சந்தியா...சொல்வதற்கு எதாவது இருந்தால் தானே?

படத்தின் 2 ஆம் பாதி தான் ரசிகர்களின் ஹாஷ்ய உணர்வுக்கு சரியான தீனி போடுகிறது. செவ்விந்தியராக வரும் எம்.எஸ். பாஸ்கர், அவரின் மொழிபெயர்ப்பாளர் ஷாம்ஸ், நகைச்சுவையில் கொடிகட்டியிருக்கிறார்கள். அதுவும் ஷாம்ஸ் எம்.எஸ்.பாஸ்கரின் உடல்மொழியோடு அவர் பேச்சை மொழிபெயர்க்கும் விதம், டாப் க்ளாஸ். போய் ஒரு முறை பார்த்து ரசித்துவிட்டுதான் வாருங்களேன். நாசரின் வசன உச்சரிப்பு பல சமயங்களில் எம்.ஆர்.ராதாவை நினைவுப் படுத்துகிறது. அழுக்குப்பற்களுடன் வரும் சாய்குமாரின் தோற்றம் மட்டும் புதுசு(அவருக்கு!) . வசன உச்சரிப்பு எரிச்சலோ எரிச்சல்.

மரவீடுகள், கௌபாய் உடைகள், குதிரைகள், துப்பாக்கிச்சண்டைகள் என்று அத்தனை கௌபாய் சமாச்சாரங்களையும் தந்திருக்கும் ஆர்ட் டைரக்டருக்கு வாழ்த்துகள். இசை ஜி.வி. ப்ரகாஷ் குமாராம். இம்சை. பாடல்கள் ஒன்றும் தேறவில்லை என்றாலும், காட்சியமைப்பில் உட்கார வைத்துவிடுகிறார்கள்.

சிம்புத்தேவன், திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. சில சமயங்களில் படத்தில் தொய்வு ஏற்படுவதும், உடனே சுவாரஸ்யமாவதுமாய் வரும் ஊசலாட்டங்களை தவிர்த்திருக்கலாம். பாஸ்மார்க், ரிவால்வர் தெரு, உஷாபுரம் (USA புரமாம்), குடி குடியை ரேப் பண்ணும், தின ஒப்பாரி, அணு குண்டு ஒப்பந்தம் என்று சிம்புத்தேவன் ப்ராண்ட் ஐட்டங்களும் படத்தில் உண்டு. சிம்புத்தேவனுக்கு ஜஸ்ட் பாஸ்மார்க் கொடுக்கலாம்.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் - எம்.எஸ்.பாஸ்கர், ஷாம்ஸ் இல்லாவிட்டால் டவுசர் கிழியும்.

2 கருத்துகள்: