இலங்கையில் நடந்த தமிழின படுகொலைப் போரில், விடுதலைப்புலிகள் பின்வாங்கியவுடன் (அல்லது முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டதாக சொன்னவுடன்) உத்தம தமிழ் எழுத்தாளரும், சாநியும் ஆனந்தக் கூத்தாடினார்கள். இருவருமே காந்தியை உதாரணம் காட்டி, வன்முறை எப்போதும் வெற்றி பெறாது என்று தத்துவமழை பொழிந்தார்கள். இதில் உத்தம தமிழ் எழுத்தாளர் ஒரு படி மேலே போய், காந்தியைப் பற்றி தினமும் ஒரு கட்டுரை எழுதி,தன் வாசகர்களை அடிக்கடி புல்லரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
இப்போது இந்த இருவருமே போலிச்சாமியார் நித்யானந்தர் (எ) ராஜசேகரன் விஷயத்தில் ஒரே மாதிரியான மென்மையான போக்கை கடைபிடிக்கிறார்கள்.
“இந்து ஞான மரபை, இந்து தத்துவ மரபை, இந்து சிந்தனை மரபை நித்யானந்தர் போன்ற தனி மனிதர்களால் அழிக்க முடியாது. தர்மம், சத்தியம் இவற்றில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது அதிர்ச்சி அளிக்காது” என்று சொல்லி தன் இந்து மத வெறியைத் தணித்துக்கொண்டிருக்கிறார் உ.த.எ. இந்து மதத்தின் பெயரால், இழி செயல் செய்திருக்கும் அந்தச் சாமியாரைப் பற்றி எழுதுவதைக் காட்டிலும், இந்து மத மரபுகள் அழிக்கப்படமுடியாது என்று ஸ்தாபிப்பதில்தான் இவருக்கு எவ்வளவு அவசியம் நேர்ந்திருக்கிறது பாருங்கள்.
சாநி- தன் இணையத்தளத்திலிருந்து, அவரின் “வாழும் கடவுளை” அப்புறப்படுத்தியிருக்கிறார். “நித்யானந்தன் என்னும் அயோக்கியன்” என்று தலைப்பிட்டு ஒரு இடுகையை இட்டு, அதை உடனடியாக நீக்கியும் இருக்கிறார். இதற்குப்பிறகு தான் காமெடி. Scandal என்னும் தலைப்பில் அவரின் வாசகர் ஒருவரின் கடிதத்தை பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில் அந்த வாசகர் எழுதியிருப்பது.
“தினமும் 16 மணி நேரம் கடுமையாக உழைக்கும் நித்யானந்தர், பெண்களின்மேல், ஈர்க்கப்பட்டு தவறு செய்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. (பின்னே என்ன மயிறுக்கு இவர் ப்ரம்மச்சர்யத்தைப் போதிக்கிறாராம்). தினமும் இரவில் சிறிது நேரம் தூக்கம் வராமல் அவதிப்படும் நான் அவரிடம் சென்று யோகம் பயில இருந்தேன். இனிமேல், அதற்கு வாய்ப்பில்லை போல் தோன்றுகிறது. அவருக்கு கடவுள் நிறைய பரிசுகளை அளித்திருக்கிறார். அவர் மிகச்சிறந்த யோகா மாஸ்டர்.”
அடடா, நேர்மையாக கட்டுரை எழுதவேண்டிய இந்த இரு எழுத்தாளர்களும், இந்து மதத்தையும், நித்யானந்தரையும் காப்பாற்ற செய்யும் முயற்சிகளைப் பார்க்கும்போது, கோபம் பொங்கி எழுகிறது. ஒரு தனி மனித தவறுக்கும், இந்து மதத்திற்கும் முடிச்சுப் போட்டு, ”கவலைப்படாதீர்கள், நம் இந்து மதம் அழியாது” என்று கட்டுரை எழுதியிருக்கும் உ.த.எ. தன்னை இலக்கியவாதி என்று சொல்லிக்கொள்ளத் தகுதியற்றவராகிறார்.
நித்யானந்தரை விட்டு விலகும் மக்கள் கூட்டம் இன்னொரு சாமியாரை நம்ப ஆரம்பிக்கும் - அவரின் தகிடுதத்தம் வெளிப்படும்வரை.
வாழ்க தமிழகம். வாழ்க தமிழ் மக்கள்.


