மாயாவதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாயாவதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 17, 2010

அப்துல்லாஹ்வும், மாயாவதியும்

என்னுடைய மாமா ஒருவர் தீவிர கடவுள் மறுப்புக்கொள்கை உடையவராக இருந்தார். பெரியாரின் பேச்சில் (அ) கருத்தில் கவரப்பட்டு பகுத்தறிவுவாதியாக மாறினார். பெரியார் அறிவித்த ‘குடுமி அறுப்புப் போராட்டத்தில்’ கலந்துகொண்டு, சில பார்ப்பனர்களின் குடுமிகளை அறுத்து, அதற்காக போலீஸாரால் தேடப்பட்டிமிருக்கிறார். அப்போது, அவர் செந்தாரப்பட்டியில் இருக்கும் எங்கள் வீட்டில் தான் ஒளிந்திருந்ததாக என் தாத்தா கூறுவதுண்டு.  அச்சமயத்தில் நான் பிறந்திருக்கவேயில்லை. பிறகு என்ன ஆனதோ, திடீரென்று ஒரு நாள் தீவிர ஆன்மீகவாதியாக மாறினார். தினமும் குளித்து, முருகனை வழிபட்டு, திருநீறு பூசி, குடும்பத்தார்க்கும் தன் கையாலே திருநீறு பூசிய பிறகே அன்றைய தினத்தைத் தொடங்குவார்.

இதுபற்றி என் தாத்தாவிடம் கேட்டபோது அவர் சொன்னது: “உங்க மாமன் போலீஸுக்கு பயந்து நம்ம வீட்ல வந்து ஒளிஞ்சிக்கிட்டிருந்தான். சாமி இல்லவே இல்லைன்னு என்கிட்ட வாதம் செஞ்சான். நான் மாரியப்பன் பூசாரி கிட்ட ஒரு நாள் அவனை கூட்டிக்கிட்டு போனேன். பூசாரி கிட்டயும் உங்க மாமன் இதே மாதிரி கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டிருந்தான். மாரியப்பன், உங்க மாமனை அங்கே சுவரில் மாட்டியிருந்த ஒரு முருகன் படத்தை உற்றுப்பார்க்கச் சொன்னான். உங்க மாமன் கூட சேர்ந்து நானும் அந்தப்படத்தை உற்றுப்பாத்தேன். சற்று நேரத்தில்  புகைப்படத்திலிருந்த முருகன் சிரிக்க, உன் மாமன் பயந்துபோய்விட்டான். கூடவே, முருகன் பின்னாலிருந்த மயிலும் தன் தோகையை ஆட்டியது. அதற்குப் பின் தான் உன் மாமன் கடவுளை நம்ப ஆரம்பிச்சான்.”

என்னால் சத்தியமாக இதை நம்ப முடியவில்லை.மாமாவிடமே கேட்டேன். அவர் சொன்னார். “உங்க தாத்தா சொன்னது உண்மை தான். அது மட்டுமில்லை. நான் போன ஜென்மத்தில் பிராமணனா பொறந்ததா, ஒரு ஜோசியக்காரன் சொன்னான்”.



தலையில் அடித்துக்கொண்டேன். பெரியார் எதை எல்லாம் எதிர்த்து வந்தாரோ, அதையெல்லாம் என் மாமா மனமுவந்து ஏற்றுகொண்டிருக்கிறார்.


பெரியாரின் தி.க.விலிருந்து அண்ணா பிரிந்து வந்தபோது, கிட்டத்தட்ட கடவுள் மறுப்புக்கொள்கையை கைவிட்டு, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற புதிய கொள்கை முழக்கத்தை அறிவித்தார். முதலில் கடவுளை மறுப்பதும், பிறகு கடவுளை ஏற்றுக்கொள்வதுமாக வாழ்ந்த, வாழ்கின்ற நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் ஏற்படாத அதிர்ச்சி, பெரியார்தாசன் என்று தன் பெயரை அறிவித்துக்கொண்ட சேஷாசலம், இன்று தன் பெயரை ‘அப்துல்லாஹ்’ என்று மாற்றிக்கொண்டு,இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருகிறார் என்பதும், இனி அவர் கடவுளின் புகழைப் பரப்பப்போவதாக அறிவித்திருப்பதும்தான். அப்துல்லாஹ் எந்த அளவிற்கு, கடவுள் மறுப்புக்கொள்கையை கடைபிடித்துவந்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், திடீரென்று அவருக்கு அவர் நம்பும் இறைவன் தன் இருப்பை எந்த நிகழ்வின் மூலம் அவருக்கு உணர்த்தியிருப்பான் என்று தெரியவில்லை.

பெரும்பாலும், வயதாக ஆக, மரணத்தின் வாசலில் இருக்கும் பலருக்கு மறு ஜென்மம் பற்றிய பயம் வரலாம். அப்படி மறுஜென்மம் என்று ஒன்று இருக்கும்பட்சத்தில், கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருந்தால் என்னவாகும் என்ற பயம் வந்து, கடவுளை பலர் நம்ப ஆரம்பிப்பார்கள். அப்படி ஏதாவது ஒன்று அப்துல்லாஹ்வுக்கு நிகழ்ந்ததா தெரியவில்லை.

எது எப்படி இருப்பினும், கடவுளை நம்ப ஆரம்பித்துவிட்ட, முன்னாள் பெரியார்தாசனை, நாம் வாழ்த்தி வைப்போம்.

நிற்க, தற்சமயம் நான் தீவிர கடவுள் மறுப்புக்கொள்கையை கடைபிடித்து வருகிறேன். ஒருவேளை நான் எதிர்காலத்தில் கடவுளை தீவிரமாக நம்ப ஆரம்பித்துவிட்டால், நான் எதனால் அப்படி மாறிப்போனேன் என்பதை அறிய நானே ஆவலாக இருக்கிறேன்.


கொசுறு: மாயாவதிக்கு ஆயிரம் ரூபாய் பணமாலை சாத்திய பகுஜன் சமாஜ் கட்சியினர், எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு அஞ்சாமல், இனிமேல் தங்களின் தலைவிக்கு பணமாலை மட்டுமே சூட்டுவோம் என்று தில்லாக அறிவித்திருக்கிறார்கள். சபாஷ்.

ஒருத்தன் மலம் கழித்துக்கொண்டே, ஏதோ தின்று கொண்டிருந்தானாம். அந்தவழியே சென்றவன் கேட்டானாம், “ஏண்டா, பேண்டுகிட்டே திங்கறே”. அதற்கு மலம் கழிப்பவன் சொன்னானாம். “நான் தொட்டுகிட்டும் தின்பேன். வேலையைப் பாத்துக்கிட்டுப் போடா”...