வியாழன், பிப்ரவரி 15, 2007

பெண்

'பெண்ணீயம்' குறித்து எழுத்தாளர் 'பிரபஞ்சன்' அவர்கள், நிறைய படைப்புகளைத் தந்துள்ளார். குறிப்பாக இதிகாச கதைகளில் பெண்கள் கேவலப் படுத்தப்பட்டிருப்பதை கோபத்தோடு விளக்கியுள்ளார்.

என் நண்பர் சிவசங்கரன், மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். நிறைய பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு கலக்கியுள்ளார். ஆனால், மனிதருக்கு கோபம் அதிகம். எதிரில் இருப்பவர் யாராக இருந்தாலும், கோபம் வந்து விட்டால் 'பழுக்க காய்ச்சிய' வார்த்தைகளை உமிழ்ந்து விடுவார். உண்மையில் இளகிய மனம் படைத்தவர்.

அன்று கல்லுரியில் பட்டிமன்றம் ஒன்று நடந்தது. தலைப்பு 'வரதட்சணைக்கு காரணம் ஆண்களா? பெண்களா?'.

'பெண்களே' என்னும் தலைப்பில் வாதாடும் ஆண்கள் குழுவில் நண்பர் சிவசங்கர் இடம் பெற்றிருந்தார். 'ஆண்களே' என்ற தலைப்பில் வாதாடிய பெண்கள் குழுவில் அந்த புதிய 'தமிழ் ஆசிரியை' (பெயர் வேண்டாமே!), முதல் முறையாக கலந்து கொண்டார்.

'புதிய தமிழ் ஆசிரியை' யின் முறை வந்தது. மிகவும் கோபத்துடன் பேசினார்.

'வரதட்சணைக் கொடுமைக்கு காரணம் ஆண்களே. வரதட்சணை கேட்கும் ஆண்களை நிற்க வைத்து சுட்டுத் தள்ள வேண்டும்.பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் மரியாதை இல்லை. தேசிய கவி என்று போற்றப் படும் பாரதியார் கூட 'கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதிலும், அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே!' என்று பெண்களின் உடற்கூறு கொண்டு பாடியிருக்கிறான்.'

(இங்கே, நான் ஒரு விசயத்தை சொல்ல வேண்டும். சிவசங்கர் 'பாரதியாரின்' தீவிர விசிறி. அவர் பாடல்கள் என்றால், இவருக்கு மிகவும் பிரியம். புதிய ஆசிரியை இவ்வாறு பேசியதும், சிவசங்கர் கோபத்துடன் எழுந்து 'மைக்கை'ப் பிடித்தார்.)

'எதிரணியைச் சேர்ந்த ஏ.கே- 47 அவர்களே..(மாணவர்களின் பலத்த கரகோஷம் .புதிய ஆசிரியையின் முகம் வாடிப் போகிறது.) பாரதியார் எந்த சூழ்நிலையில் இப்படி பாடினார் தெரியுமா? ஆங்கிலேயர்கள், தங்களுக்கு கப்பம் கட்ட மறுத்த தமிழ் நாட்டு மன்னர்களை மடக்க, அழகிய பெண்களை தூதாக அனுப்பி அம்மன்னர்களை தம் வயப்படுத்தி, ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டச் செய்தனர். 'ஆங்கிலேயர்கள் அனுப்பும் மங்கையரைக் கண்டு மயங்கக் கூடாது' என்னும் பொருள்படும் படி தான் பாரதியார் இவ்வாறு பாடினாரே ஒழிய, ஒட்டு மொத்தப் பெண் இனத்தையும் கேவலப்படுத்த அல்ல.

மேலும், பாரதியார் பெண்கள் பற்றி மிகவும் உயர்வாகத் தான் பாடியுள்ளார். 'மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டும்' என்னும் வரிகளே அதற்கு சாட்சி.'

இவ்வாறு சிவசங்கரன் பேசி முடித்ததும், பலத்த கரகோஷம் எழும்பியது. மாணவர்கள், புதிய ஆசிரியைப் பார்த்து 'ஏ.கே.47, ஏ.கே.47' என்று நையாண்டி செய்தனர். ஆசிரியையின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. யாரும் பாராதபோது, கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துகொண்டார்.


ஆனால் இதை சிவசங்கர் கவனித்து விட்டார். கோபத்தில் அவர் சொன்ன வார்த்தை தவறு என்று உணர்ந்தார். பின்னர் தனிமையில் ஆசிரியையை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இருவரும் நண்பர்களாயினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக