செவ்வாய், பிப்ரவரி 27, 2007

பாய் கடை திண்ணை (2)

நான் பார்த்த பார்வையில் ஈறு சற்று பயந்து போனான்.

புலியூரான் (எ) ராஜேந்திரனை எனக்கு அறிமுகப்படுத்தியவன் ஈறு தான். கபடி ஆட்டத்திலும், ஜல்லிக்கட்டு போட்டியிலும் ஈடுபாடு கொண்ட ராஜேந்திரனை, முதன் முதலில் பார்த்தபோது, மிரண்டு போனேன். மலைமாடு மாதிரி வளர்த்தியாய் இருந்தான். என்னைப் பார்த்ததும், 'வணக்கண்ணே!' என்று கூறி, சல்யூட் அடித்தான்.

மூவரும் சற்று நேரம் அமைதியாய் இருந்தோம். ஈறு தான் ஆரம்பித்தான்.

"அண்ணே!.. ராஜேந்திரன் அண்ணன் லவ் பண்றார். உங்க வீட்டுக்கு பின்னாடி இருக்கிற "கவிதா" வை அண்ணன் மடக்கிட்டாரு..". சொல்லிவிட்டு, கண் சிமிட்டி சிரித்தான்.

எனக்கு ஆத்திரமாய் வந்தது. +1 படிக்கும் சின்னப் பெண், 5 ஆவது கூடத் தாண்டாத இவனைப் பார்த்து எப்படி மயங்கினாள்? காதலைப் பற்றி 'அஆ' கூடத் தெரியாத எனக்கு, மனம் குமைந்தது.

ராஜேந்திரன் தொடர்ந்தான்.
"அண்ணே! நீங்க நல்லா கவிதை எழுதுவீங்களாமே! புக்ல கூட வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன்..எனக்கு ஒரு காதல் கவிதை எழுதிக்குடுங்க...கவிதாவுக்கு கவிதைனா உயிர்."

"முடியாது போடா" என்று கத்த நினைத்தேன்.ஆனால், ராஜேந்திரனின் புகழ்ச்சி, என்னைத் தடுமாற வைத்து விட்டது.

"இல்ல..ராஜேந்திரா..எனக்கு காதல் கவிதை எழுத வராது..இதுவரைக்கும் நான் காதல் கவிதை எழுதியதில்லை."

ஈறு இடைமறித்தான். "உங்களால முடியும்ணே..".

பேப்பர் கொண்டு வந்து கொடுத்தார்கள். நானும் பேனாவை எடுத்து வைத்துக் கொண்டு யோசிப்பது போல் நடித்தேன். அப்புறம், எழுத ஆரம்பித்தேன்.

கரையும், அலையும்
இருந்தால் தான் கடல்.
உயிரும், உணர்வும்
இருந்தால் தான் உடல்.
எண்ணமும், எழுத்தும்
இருந்தால் தான் மடல்.
அன்பே! நீயும், நானும்
இணைந்தால் தான் காதல்.

கவிதையை(?!) படித்து விட்டு, ராஜேந்திரன் துள்ளினான். "அண்ணே..இது தான் கவித..கவித.." என்று புல்லரித்தான்.
என் கையிலிருந்த கவிதை காகிதத்தை, ஏறக்குறைய உருவிக் கொண்டு போயினர் ஈறும், புலியூரானும்.
பிறகு தான், எனக்கு வினையே ஆரம்பித்தது.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக