செவ்வாய், ஏப்ரல் 08, 2008

பாய் கடை திண்ணை (4)

புலியூர் ராஜேந்திரன் மூலம் என் வாழ்க்கையில் விளையாடிய ஈறு, கிரிக்கெட் மூலம் மீண்டும் என் வாழ்க்கையை தாறுமாறாக ஆக்கப் போகிறான் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

"நிஜமாத்தான் சொல்றியா அருண்?"

"சத்தியமாண்ணே! நீங்க டீம் ஆரம்பிச்சா, நிறைய பேர் அதுல சேருவாங்க" என்றான்.

"எப்படிடா சொல்ற?"
"அது வந்துண்ணே..."
பாபு டீக்கடை வழியாக ஒரு சிறு கும்பல் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. எல்லோரும் என்னுடைய அடிப்பொடிகள்.வந்தவர்கள் முகம் எல்லாம் வாடிப்போய் இருந்தது. எனக்குப் புரிந்துவிட்டது. என்னை மட்டும் அணியில் இருந்து நீக்காமல், என் தற்கொலைப்படையினரையும் ஒட்டு மொத்தமாக நீக்கம் செய்திருக்கிறார்கள்.
ஹும்..என்னையே அணியில் இருந்து தூக்கி விட்டார்களாம். இவர்கள் மட்டும் எம்மாத்திரம்?
ஈறு மீண்டும் தொடர்ந்தான்.
"அண்ணே, இவங்க எல்லாரையும், டீம வுட்டு தூக்கிட்டாங்க. நீங்க ஆரம்பிக்கிற புது டீம்ல நாங்க எல்லாரும் சேர்ந்துடுறோம் அண்ணே..."
சபீர் மெதுவாக தொண்டையை கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார்."பசங்க சொல்றதுதாங்க சரி. நாம புது டீம் ஆரம்பிக்கலாம். அப்புறம் நாம எல்லாம் டோர்னமென்ட் வெளையாடுறது எப்போ?"
இங்கே நான் சபீரைப் பற்றி சொல்லியாகவேண்டும். கிட்டத்தட்ட என் வயதுக்காரர்.
சபீர் பந்து வீசும் அழகே தனி. வேக வேகமாய் ஓடி வந்து, மிக மெதுவாய் பந்தை வீசுவார். அவருடைய ஒரு ஓவருக்கு குறைந்தபட்சம் 20 ஓட்டங்களையாவது எதிர் அணியினர் விளாசுவது நிச்சயம். அப்போதெல்லாம் சிறு வயது பந்து வீச்சாளர்கள் என்னிடம் வந்து, சபீரின் பந்து வீச்சை கோபத்துடன் விமர்சிப்பார்கள்.
அவர்களுடைய மனக்குமுறலை எளிதில் தீர்த்து விடுவேன்.
கொதித்தெழுந்த அந்த விடலைப் பையனுக்கு, பந்து வீச அனுமதி தந்தால், அவன் குஷியாகி, பந்து வீச ஆயத்தமாகி விடுவான்.
"அண்ணே! நீங்க தான் கேப்டன். சபீர் அண்ணன் துணை கேப்டன். நான் ஓபனிங் பௌலர்..." என்று சொல்லி சிரித்தான் ஈறு.
"அடப் பாவி. சபீர் பற்றி தெரிந்திருந்தும், அவரை துணை கேப்டன் என்கிறானே இந்த ஈறு". அவனுடைய செவுளில் ஓங்கி அறைய வேண்டும் போல் இருந்தது. கட்டுப்படுத்திக்கொண்டேன்.
"சரி. மறுபடியும் நாளைக்கு இதைப் பத்தி பேசலாம். எல்லாரும் நாளைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு ஏரிக்கு வந்திடுங்க.." என்றேன்.
ஒட்டு மொத்தக் கும்பலும் திருப்தியாகக் கலைந்து சென்றது.
தன்னுடைய ஜெராக்ஸ் இயந்திரத்தை பழுது நீக்கிவிட்டு என்னருகே வந்து அமர்ந்த அக்பர் பாய், என்னைப் பார்த்து விஷமமாய் சிரித்தார்.
அக்பர் பாய்க்கு 38 வயது தான் ஆகிறது. ஆனால் பார்ப்பதற்கு 60 வயசு கிழவர் போல் இருப்பார். தலை பாதி வழுக்கை. மீதி எல்லாம் வெள்ளைமுடி. எத்தனையோ முறை அவரிடம் "தலைச்சாயம்" அடித்துக் கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறேன்.ஒருபோதும் அவர் அவ்வாறு செய்ததில்லை. கேட்டால், "இதுதான் என் உண்மையான உருவம், இதை மாற்றிக் கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை" என்று கூறுவார்.

ஆனால் அன்று "தலைச்சாயம்" பூசி இருந்தார்.என்னால் நம்பவே முடியவில்லை. "பாய், என்ன இது அதிசயம்"..என்றேன் - அவர் தலையை பார்த்தபடி.
"எல்லாம் என் பொண்டாட்டி வற்புறுத்தல்" என்றார்.
"பத்து வயசு கொறஞ்சிட்டீங்க பாய்" என்றேன்.
"அப்படினா 28 வயசு ஆள் மாதிரி தெரியறனா?"
"இல்லை 50 வயசு ஆள் மாதிரி"....
குழந்தையைப் போல் கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்தார் பாய்.
(தொடரும்)