வியாழன், ஏப்ரல் 24, 2008

பாய் கடை திண்ணை (6)

பாய்க்கு மொத்தம் மூன்று குழந்தைகள். மூத்தவன் பெயர் முகமது யஹியா, 10 வயது. அடுத்தது பெண். பாத்திமா பீவி, 8 வயது. கடைசியாக ஒரு பையன் முகமது யாசின்.ஒன்றரை வயது.

அன்று நான் பாய் கடைக்கு வந்தபோது, பாய் சுருட்டு போட்டுக்கொண்டிருந்தார். அவரின் எதிரே அவரின் கடைசி பையன், பாயைப்
போலவே சம்மணமிட்டு அமர்ந்திருந்தான். பாய் அவனுக்கருகில் சில ப்ளாஸ்டிக் பொருட்களை பரப்பிக் கொண்டிருந்தார்.

“இது எதுக்கு மொதலாளி...”

”அவனுக்கு இப்போ பல்லு மொளைக்கிற வயசு. எவுறு ஊறிக்கிட்டு இருக்கும். எதையாவது கடிக்கத் தோணும். அதான், இத குடுக்குறன்...விடுங்க, அவன் பாட்டுக்கு கடிச்சிக்கிட்டு இருக்கட்டும்.”

யாசின் என்னைப்பார்த்து, தன் பொக்கைப் வாயைக்காட்டிச் சிரித்தான். பிறகு, பிளாஸ்டிக் சிங்கத்தை வாயில் வைத்து கடிக்க ஆரம்பித்தான். அவன் வாயிலிருந்து ஜொள்ளு ஊற்றியது.

திண்ணையின் மேல் படியில், பாய்க்கு அருகில் சென்று அமர்ந்துகொண்டேன்.

”பாய், யாசின் உங்கள ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கறான்.”

”இதுலயும் ஜெராக்ஸ் தானா? சரி, நீங்க எப்போ கல்யாணம் பண்ணி, ஒரு பொட்டப்புள்ளய பெத்து, என் பையனுக்கு கட்டிக் குடுக்கப்போறீங்க?”

“ரொம்ப கஷ்டம் மொதலாளி”

“இப்படியே, கிரிக்கெட், கம்ப்யூட்டர் சென்டர்னு ஊரு சுத்துனா, கண்டிப்பா கஷ்டம் தான்”....

லேசாக எனக்கு உறுத்தியது. ஒன்றும் பேசத் தோன்றவில்லை.பாய் கடை எதிரே இருக்கும் குறுகிய சந்தைப் பார்த்தேன்.அங்கே,என் தாத்தா வந்துகொண்டிருந்தார். பாய் என்னைப் பார்த்து, ஒரு விஷமப் புன்னகையைப் படரவிட்டார். எனக்குப் புரியவில்லை.

என் அம்மா வழி தாத்தா, ஒரு பத்திர எழுத்தர்.அவரின் வீடு அந்த சந்தில்தான் இருந்தது. அவர் எங்கள் அருகில் வந்ததும், பாய் அவரிடம் கேட்டார்.

“ஏன் மாமா, பேசாம பெத்துசாமிக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சா என்ன? அப்பவாச்சும் உருப்படுவானான்னு பாக்க்கலாம்”

வெற்றிலையை மடித்து வாயில் போட்டுக்கொண்டே, என் தாத்தா சொன்னார்.
“மொதல்ல அவன ஒரு நல்ல வேலைய பாக்க சொல்லு.” சொல்லிவிட்டு தெற்கு நோக்கி நகர்ந்து போனார்.


“பாருங்க மொதலாளி, 70 வயசாகியும் இன்னும் பத்திரம் எழுதறார். தம்மம்பட்டி சப்-ரெஜிட்ரார் ஆபீஸுக்கு போறதுக்கு சின்னப்பையன் மாதிரி பஸ் பிடிக்கப் போறார். நீங்களும் தான் இருக்கீங்களே..”

”இப்ப அவரக் கூப்பிட்டு என்னை ஏன் பாய் இன்சல்ட் பண்றீங்க?”

”சும்மாதான். பொழுதுபோக வேணாமா?”.

எங்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் யாசினை மறந்து போனோம்.சட்டென்று யாசினைப் பார்த்த நான் பதறிப் போனேன்.

அங்கே அவன் மூச்சா போயிருந்தான். கூடவே மலம் கழித்திருந்தான். தன் இடது கையால், மலத்தைப் பிசைந்து, தன் அழகிய கோலிகுண்டு கண்களால், அதை அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அய்யே...பாய்..என்ன இது? சொல்லிவிட்டு, படியை விட்டுக் குதித்து, ரோட்டில் நின்றேன். பாய் பதட்டப்படவில்லை.

“சைதானி..சைதானி..”

குரல் கேட்டு, உள்ளே அமர்ந்து சுருட்டு போட்டுக்கொண்டிருந்த பாயின் மனைவி ஓடி வந்தார்.

“பாரு இவன”..

பாயின் மனைவியும் பதட்டம் அடையவில்லை. யாசினை கொத்தாக தூக்கி, வீட்டுக்குள் கொண்டு போனார்.5 நிமிடம் கழித்து வாளியும், துடைப்பமுமாக வந்து,அந்த இடத்தை சுத்தப்படுத்திவிட்டுப் போனார்.

மறுபடியும் முதல் படிக்குத்தாவி, பாய் அருகில் அமர்ந்தேன்.

”பாய் உங்களுக்கு, யாசின் மேல கோவம் வரலயா?”

“அவன் சின்னப்பையன் மொதலாளி. எரும மாதிரி வளந்த நீங்களே என் பேச்ச கேக்கமாட்டேங்கிறீங்க.. ஒன்றரை வயசு பையன் அவனுக்கு சொன்னாப் புரியவா போவுது”.

இதுக்கு நான் கேக்காமலேயே இருந்திருக்கலாம்.

பாய் தொடர்ந்தார்.

“மொதலாளி,எங்க இஸ்லாத்துல சொல்வாங்க. மல்யுத்ததில் வெற்றி பெறுபவன் மாவீரன் அல்ல. கட்டுக்கடங்கா கோபம் வரும்போது
அடக்கிகொள்பவனே மாவீரன்னு
...”

பிடறியில் அறைந்த மாதிரி இருந்தது.

(தொடரும்)