புதன், மார்ச் 10, 2010

ரூமர் செல்வா

செல்வகுமாரையும், பாலாஜியையும் நீங்கள் ஒன்றாகப் பார்க்காவிட்டால், அன்று புத்தனாம்பட்டியில் இடிமழை நிச்சயம். அந்த அளவிற்கு அவர்கள் நெருங்கிய நண்பர்கள். (இந்த சமயத்தில் உங்களுக்கு கோவா திரைப்படம் ஞாபகம் வந்து, 'இது வித்தியாசமான நட்பா இருக்gay' என்று ஆச்சர்யப்பட்டால், நீங்கள் நாசமாகப்போகக்கடவது. இது வேறு மாதிரியான புனிதமான நட்பு.)



                                          (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)


செல்வகுமாருடன் அமர்ந்து வகுப்பைக் கவனிப்பதே ஒரு பேரானந்தம். முன்னிருக்கை பெஞ்சில் பெண்கள் அமர்திருக்க, அவர் பின்னிருக்கை பெஞ்சிலிருந்து ‘இரட்டை அர்த்த’ (அ) நேரடி அர்த்த அசைவ நகைச்சுவையை அடிக்குரலில் சத்தமின்றி எடுத்து விட்டால், உம்மனாம்மூஞ்சி லட்சுமிக்குக்கூட சிரிப்பு வரும். அந்த அளவிற்கு நகைச்சுவை செய்வார். வெண்ணிற ஆடை மூர்த்தி கூட இவரிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும். தவிர, ஒரு நாள் தெரியாமல் அவர் அருகில் உட்கார்ந்து  ஒரு வகுப்பைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது செல்வா, “மேடம் எனக்கு ஒரு டவுட், இங்க வந்து கொஞ்சம் க்ளியர் பண்ணுங்களேன்’ என்று சொன்னார். ஆனால், மேடமோ நாளை பார்க்கலாம் என்றார். செல்வா, என் காதில் சொன்னார். “மேடம் அந்த 3 நாள்ல இருக்காங்க. பார்த்தாவே டயர்டா தெரியறாங்க பாரு. கூப்பிட்டா கிட்ட வரமாட்டாங்க”. “இது எப்படி உங்களுக்குத் தெரியும்” என்றேன். ”போன மாசம் கூட இப்படித்தான் இருந்தாங்க. இன்னையோட கரெக்டா 30 நாள் ஆகுது”. சொல்லிவிட்டு சிரித்தார். உண்மையில் செல்வா கணக்கில் சூரப்புலி என்று அன்று தான் நான் உணர்ந்தேன். அதன்பிறகு, செல்வா அருகில் நான் அமர்வதில்லை. நிற்க, எனக்கு கணக்குப்பாடம் பிடிக்காது.


உதய கீதம் படத்தில், தேங்காய்க்குள் பாம் இருக்கிறது என்று உதார் விடுவார் கவுண்டமணி. பிறகு, அந்தப் புரளி கடைசியில் அவரிடமே வந்து சேரும். செல்வாவும் அப்படித்தான். ஒரு புரளியை சத்தமின்றி கிளப்பிவிட்டு, அப்பிராணியாய் முகத்தை வைத்துக்கொள்வார். இதனால்தான் அவருக்கு ‘ரூமர்’ என்று செல்வா என்று பெயர் வந்தது.


2004 ஆம் ஆண்டு முதன்முதலாக SakSoft என்னும் கம்பெனியில் நான் வேலைக்கு சேர்ந்தபோது, (அப்போ 1996 -லிருந்து 8 வருஷமா, நீ என்னத்தப் புடுங்கிக்கிட்டிருந்த என்று நீங்கள் கேட்டால், பொறுமை. அதைப்பற்றி ‘கும்பகர்ணன்’ என்னும் தலைப்பில் என்னைப்பற்றி எழுதும்போது, விளக்கம் தருகிறேன்). செல்வா ‘சத்யத்தில்’ வேலை பார்த்துகொண்டிருந்தார். ஒரு நாள் எனக்கு ஃபோன் செய்து, கிட்டத்தட்ட 2 மணி நேரம் பேசினார். மனிதர் மாறவேயில்லை. பழச எல்லாம் மறங்க என்று அட்வைஸ் செய்தார். அவர் பல வெளிநாடுகளுக்கு சென்று வந்ததையும் அறிந்துகொண்டேன். பிற்பாடு SakSoft-ல் தாக்குபிடிக்க முடியாமல், ஓடி வந்துவிட்டேன். பிறகு ஒரு நாள் ‘டைடல்’ பார்க்கில் உள்ள ‘சத்யம்’ கம்பெனியில், நண்பர் பரணீதரன் ஏற்பாடு செய்த இண்டர்வியூவுக்கு வந்தபோது, செல்வாவைப் பார்த்தேன். அதே சிரிப்பு. அதே பூனைக்கண் பார்வை. நன்றாக பேசினார். பிறகு நடந்த இண்டர்வியூவில், ஒரு கறுத்தப் பெண் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சொத்தையாக பதிலளித்தேன். அந்தப் பெண் என்னைப் பார்த்து சொன்னார். ‘அடிப்படையே உங்ககிட்ட சரி இல்லை. நல்லாப் படிங்க”. தலையாட்டிவிட்டு வந்தேன். பரணீதரன் திட்டினார். “யோவ் என்னய்யா, இப்படி சொதப்பிட்ட! நீ சுமாரா பதில் சொல்லியிருந்தா கூட, செலக்ட் ஆயிருப்ப. நேரா பூனாவுக்கு போஸ்டிங்க் போட்டு அனுப்பியிருப்பாங்க”. “சாரி பாஸ்” என்று தலையை சொறிந்தேன். அதன் பிறகு 2 மாதம் கழித்து, வேறு ஒரு பூனா கம்பெனியில் செலக்ட் ஆகி, இன்னமும் பூனாவிலிருக்கிறேன். விதி வலியது.


அடடா, செல்வா பற்றி சொல்லவந்துவிட்டு, சுயபுராணம் பாடுகிறேன் பாருங்கள்.


ஒருமுறை கல்லூரியில் நடந்த Quiz போட்டியில் நானும், செல்வாவும், செந்தில்குமரனும் ஓரணியாக கலந்து கொண்டோம். அதில், வெற்றி பெற நாங்கள் செய்த தகிடுத்தத்தங்கள், நித்யானந்தா செய்ததை விடவும் மொள்ளமாறித்தனம். இறுதியில் நாங்கள் தான் வென்றோம் என்பதை சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? அது, ரகசியமாகவே இருக்கட்டும் விடுங்கள். அதை இப்போது சொல்லி, நிகழ்ச்சி நடத்திய பங்க்ஸ், பிரபுராஜ் மற்றும் சிவசங்கரை வெறுப்பேற்ற விரும்பவில்லை. மேலும், நாங்கள் செய்த கேப்பமாறித்தனத்தை அவர்கள் வேறு ஒரு சோர்ஸ் மூலம் அறிந்துகொண்டு எங்களைத் திட்டியதை நாங்கள் இன்னொரு சோர்ஸ் மூலம் அறிந்துகொண்டு மகிழ்ந்தோம்.


இறுதியாக, நான் செல்வாவிடம் கேட்க மறந்த (அ) இப்போது கேட்க நினைக்கும் கேள்வி.

1. அன்று இரவு, ஷண்முகப்பிரியாவின் லாகின் - இல் நுழைந்து, அவரின் பேசிக் மொழி ப்ரோகிராம்களை அழித்து, அவரைப்பற்றி தாறுமாறாக வெறும் REM Statement-ல் டைப் செய்து வைத்தது யார்?

2. லேப் செந்தில் அதைக் கண்டுபிடித்தவுடன், பிரின்சிபால் ராமலிங்கத்திடம் சென்று விசாரணையில் கலந்து கொண்டது யார் யார்?

நாளை இடம்பெற இருப்பவர் “ஒன்றை” உதயகுமார். கோக்குக்கும், கோக்கோ-கோலாவுக்கும் வித்தியாசம் அறியா அப்பிராணி இவர்.

2 கருத்துகள்: