வெள்ளி, மார்ச் 19, 2010

’ஒன்றை’ உதயகுமார்

முன்குறிப்பு:  இந்தத் தொடரில் நான் எழுதும் சம்பவங்கள் எதையாவது நீங்கள் ஆட்சேபித்தால், தயவுசெய்து எனக்கு அதைத் தெரியபடுத்தவும். அவற்றை நான் உடனடியாக நீக்கிவிடுவேன் என்று உத்திரவாதமளிக்கிறேன்.


                                          (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)

பிரபுராஜ் பார்க்கத்தான் வளர்த்தியாய் பெரியமனிதன் போல் காட்சி அளிப்பான். ஆனால், நிஜத்தில் அவன் ஒரு சிறுவன். அதுவும் சாதாரண சிறுவன் இல்லை. குறும்புக்கார சிறுவன். அவனிடம் அடிவாங்காதவர்களை எங்கள் வகுப்பில் பார்ப்பது கடினம். (எம்.சி.ஏ. படிக்கும்போது கூட இவன் ஒரு சிறுவன் மாதிரி நடந்துகொண்டது எங்களில் பலருக்கு எரிச்சலூட்டியதுண்டு). ஆங்... உதயகுமாரை விட்டுவிட்டு பிரபுராஜ் பற்றி ஏன் சொல்லுகிறேன்? ஒருமுறை பிரபுராஜிக்கும், உதயகுமாருக்கும் சண்டை மூண்டது. பிரபுராஜின் வழக்கம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே! அதனால் நாங்கள் அந்த சண்டையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சட்டென்று சண்டை மிகக்கேவலமான முறைக்கு மாறியது. வேறொன்றுமில்லை. பிரபுராஜ் திடீரென்று உதயகுமாரை கற்களால் தாக்க ஆரம்பித்தான். உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில், பீதியில் உதயகுமார் வேகமாக ஓட ஆரம்பித்தார்.ஓடினார், ஓடினார், மகாத்மா காந்தி ஹாஸ்டலின் கிரிக்கெட் கிரவுண்டிற்கே ஓடினார். விட்டதா விதி. வடகிழக்கு திசையிலிருந்து பிரபுராஜினால் ஏவப்பட்ட கல்லொன்று வேகமாய் அக்னி-2 ஏவுகணை போல் பாய்ந்து வந்து உதயகுமாரின் வலது கணுக்காலைத் தாக்கி, இலக்கினைக் கச்சிதமாய் வீழ்த்திய மகிழ்ச்சியில் கீழே விழுந்தது. அடிபட்ட உதயகுமாருக்கு கோபமும், வீரமும் ஒரு சேர கிளம்ப, இப்போது உதயகுமார் பிரபுராஜை கற்களைக் கொண்டு தாக்க ஆரம்பித்தார். ஆனால், பிரபுராஜ் வளைந்து, வளைந்து ஓடி உதயகுமாருக்கு போக்கு காட்டினான். போதாக்குறைக்கு என்னை அடிக்க முடியாது என்று பற்களைக்காட்டி பழிப்பு காட்ட, உதயகுமாருக்கு கோபம் கட்டுக்கடங்காமல் போனது. பிரபுராஜை கற்களை வீசிக்கொண்டே துரத்தியபடி, உதயகுமார் சொன்னார் “ஒன்ற காலை ஒடைக்காம விடமாட்டன்டா”. கோயம்புத்தூர் பாஷையில் இவ்வாறு உதயகுமார் சொன்னவுடன், பிரபுராஜிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. ஓடிக்கொண்டே பிரபுராஜ், “ஒன்றை காலை என்னடா,  ரெண்டு காலையும் ஒடைடா” என்று உதயகுமாரை வெறுப்பேற்றினான். இதுதான், உதயகுமாருக்கு “ஒன்றை” என்று நிக் நேம் வரக் காரணம். பிறகு அவர்கள் சண்டை என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது. ஆனால், பிரபுராஜின் ஒன்றைக்காலை உதயகுமார் உடைக்கவில்லை.

உதயகுமார் தற்போது பெங்களூருவிலிருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கிறார். அவரிடம் 3 ஆண்டுகளுக்கு முன், நான் செல்பேசியில் தொடர்பு கொண்டபோது, கல்லூரி மாணவராக என்னுடன் பழகியபோது எப்படி பேசினாரோ, அப்படியே பந்தா இல்லாமல் பேசினார். என்னைப் பற்றியும் கேட்டு, வாழ்க்கையில் முன்னுக்கு வரும்படி உற்சாகமூட்டினார். அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. சொந்த வீடும் (பெங்களூரில்), காரும் வாங்கியிருப்பதாக அவர் சொன்னபோது சந்தோஷமாயிருந்தது. (அட சத்தியமாப்பா..).நான் இன்னும் எதுவும் வாங்கவில்லை.

கல்லூரியில் படிக்கும்போது உதயகுமார் மற்ற நண்பர்களுடன் எதோ ஒரு ஊருக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கே எல்லோரும் ஒரு வட்டமான மேஜையில் அமர்ந்து டின் கோக் குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எல்லோருடைய டின்னும், கோகோ-கோலா என்று அச்சிடப்பட்ட பக்கத்தைக்காட்டிக்கொண்டிருக்க, உதயகுமார் தன்னுடைய டின்னை பார்த்திருக்கிறார். அதில் கோக் என்று அச்சிடப்பட்டிருக்க, கோபப்பட்ட உதயகுமார் கத்தினார். “டேய் நீங்க எல்லாம் கோகோ-கோலா சாப்புடறீங்க. எனக்கு மட்டும் ஏண்டா கோக் வாங்கி கொடுத்திருக்கிறீங்க”. வழக்கம்போல் பிரபுராஜ் கோக் புரையேற பயங்கரமாக சிரித்து, உதயகுமாரை வெறியேற்றினான்.

ஏம்.சி.ஏ. இறுதியாண்டில் நானும், பொன்னுசாமியும்,  தேவநாதனும்,  உதயகுமாரும் அபினிமங்கலத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தோம். அப்போதெல்லாம், நாங்கள் இரவு நேர கம்ப்யூட்டர் லேபுக்கு அபினிமங்கலத்திலிருந்து புத்தனாம்பட்டிக்கு நள்ளிரவில், நடந்தே வருவோம், நடந்தே திரும்பிப்போவோம். உதயகுமாரிடமிருந்து நான் ப்ரோகிராம் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். கலக்குங்கள் பொள்ளாச்சி சிங்கமே!!!

நாளை இடம்பெற இருப்பவர் “ப்ரூக்பாண்ட்” விஸ்வநாதன்.  ஒரே நாளில் கணக்கு வழக்கில்லாமல் டீயை மெஷின்போல் குடிப்பவர் இவர்.

1 கருத்து: