கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 19, 2010

’ஒன்றை’ உதயகுமார்

முன்குறிப்பு:  இந்தத் தொடரில் நான் எழுதும் சம்பவங்கள் எதையாவது நீங்கள் ஆட்சேபித்தால், தயவுசெய்து எனக்கு அதைத் தெரியபடுத்தவும். அவற்றை நான் உடனடியாக நீக்கிவிடுவேன் என்று உத்திரவாதமளிக்கிறேன்.


                                          (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)

பிரபுராஜ் பார்க்கத்தான் வளர்த்தியாய் பெரியமனிதன் போல் காட்சி அளிப்பான். ஆனால், நிஜத்தில் அவன் ஒரு சிறுவன். அதுவும் சாதாரண சிறுவன் இல்லை. குறும்புக்கார சிறுவன். அவனிடம் அடிவாங்காதவர்களை எங்கள் வகுப்பில் பார்ப்பது கடினம். (எம்.சி.ஏ. படிக்கும்போது கூட இவன் ஒரு சிறுவன் மாதிரி நடந்துகொண்டது எங்களில் பலருக்கு எரிச்சலூட்டியதுண்டு). ஆங்... உதயகுமாரை விட்டுவிட்டு பிரபுராஜ் பற்றி ஏன் சொல்லுகிறேன்? ஒருமுறை பிரபுராஜிக்கும், உதயகுமாருக்கும் சண்டை மூண்டது. பிரபுராஜின் வழக்கம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே! அதனால் நாங்கள் அந்த சண்டையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சட்டென்று சண்டை மிகக்கேவலமான முறைக்கு மாறியது. வேறொன்றுமில்லை. பிரபுராஜ் திடீரென்று உதயகுமாரை கற்களால் தாக்க ஆரம்பித்தான். உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில், பீதியில் உதயகுமார் வேகமாக ஓட ஆரம்பித்தார்.ஓடினார், ஓடினார், மகாத்மா காந்தி ஹாஸ்டலின் கிரிக்கெட் கிரவுண்டிற்கே ஓடினார். விட்டதா விதி. வடகிழக்கு திசையிலிருந்து பிரபுராஜினால் ஏவப்பட்ட கல்லொன்று வேகமாய் அக்னி-2 ஏவுகணை போல் பாய்ந்து வந்து உதயகுமாரின் வலது கணுக்காலைத் தாக்கி, இலக்கினைக் கச்சிதமாய் வீழ்த்திய மகிழ்ச்சியில் கீழே விழுந்தது. அடிபட்ட உதயகுமாருக்கு கோபமும், வீரமும் ஒரு சேர கிளம்ப, இப்போது உதயகுமார் பிரபுராஜை கற்களைக் கொண்டு தாக்க ஆரம்பித்தார். ஆனால், பிரபுராஜ் வளைந்து, வளைந்து ஓடி உதயகுமாருக்கு போக்கு காட்டினான். போதாக்குறைக்கு என்னை அடிக்க முடியாது என்று பற்களைக்காட்டி பழிப்பு காட்ட, உதயகுமாருக்கு கோபம் கட்டுக்கடங்காமல் போனது. பிரபுராஜை கற்களை வீசிக்கொண்டே துரத்தியபடி, உதயகுமார் சொன்னார் “ஒன்ற காலை ஒடைக்காம விடமாட்டன்டா”. கோயம்புத்தூர் பாஷையில் இவ்வாறு உதயகுமார் சொன்னவுடன், பிரபுராஜிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. ஓடிக்கொண்டே பிரபுராஜ், “ஒன்றை காலை என்னடா,  ரெண்டு காலையும் ஒடைடா” என்று உதயகுமாரை வெறுப்பேற்றினான். இதுதான், உதயகுமாருக்கு “ஒன்றை” என்று நிக் நேம் வரக் காரணம். பிறகு அவர்கள் சண்டை என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது. ஆனால், பிரபுராஜின் ஒன்றைக்காலை உதயகுமார் உடைக்கவில்லை.

உதயகுமார் தற்போது பெங்களூருவிலிருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கிறார். அவரிடம் 3 ஆண்டுகளுக்கு முன், நான் செல்பேசியில் தொடர்பு கொண்டபோது, கல்லூரி மாணவராக என்னுடன் பழகியபோது எப்படி பேசினாரோ, அப்படியே பந்தா இல்லாமல் பேசினார். என்னைப் பற்றியும் கேட்டு, வாழ்க்கையில் முன்னுக்கு வரும்படி உற்சாகமூட்டினார். அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. சொந்த வீடும் (பெங்களூரில்), காரும் வாங்கியிருப்பதாக அவர் சொன்னபோது சந்தோஷமாயிருந்தது. (அட சத்தியமாப்பா..).நான் இன்னும் எதுவும் வாங்கவில்லை.

கல்லூரியில் படிக்கும்போது உதயகுமார் மற்ற நண்பர்களுடன் எதோ ஒரு ஊருக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கே எல்லோரும் ஒரு வட்டமான மேஜையில் அமர்ந்து டின் கோக் குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எல்லோருடைய டின்னும், கோகோ-கோலா என்று அச்சிடப்பட்ட பக்கத்தைக்காட்டிக்கொண்டிருக்க, உதயகுமார் தன்னுடைய டின்னை பார்த்திருக்கிறார். அதில் கோக் என்று அச்சிடப்பட்டிருக்க, கோபப்பட்ட உதயகுமார் கத்தினார். “டேய் நீங்க எல்லாம் கோகோ-கோலா சாப்புடறீங்க. எனக்கு மட்டும் ஏண்டா கோக் வாங்கி கொடுத்திருக்கிறீங்க”. வழக்கம்போல் பிரபுராஜ் கோக் புரையேற பயங்கரமாக சிரித்து, உதயகுமாரை வெறியேற்றினான்.

ஏம்.சி.ஏ. இறுதியாண்டில் நானும், பொன்னுசாமியும்,  தேவநாதனும்,  உதயகுமாரும் அபினிமங்கலத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தோம். அப்போதெல்லாம், நாங்கள் இரவு நேர கம்ப்யூட்டர் லேபுக்கு அபினிமங்கலத்திலிருந்து புத்தனாம்பட்டிக்கு நள்ளிரவில், நடந்தே வருவோம், நடந்தே திரும்பிப்போவோம். உதயகுமாரிடமிருந்து நான் ப்ரோகிராம் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். கலக்குங்கள் பொள்ளாச்சி சிங்கமே!!!

நாளை இடம்பெற இருப்பவர் “ப்ரூக்பாண்ட்” விஸ்வநாதன்.  ஒரே நாளில் கணக்கு வழக்கில்லாமல் டீயை மெஷின்போல் குடிப்பவர் இவர்.

புதன், மார்ச் 10, 2010

ரூமர் செல்வா

செல்வகுமாரையும், பாலாஜியையும் நீங்கள் ஒன்றாகப் பார்க்காவிட்டால், அன்று புத்தனாம்பட்டியில் இடிமழை நிச்சயம். அந்த அளவிற்கு அவர்கள் நெருங்கிய நண்பர்கள். (இந்த சமயத்தில் உங்களுக்கு கோவா திரைப்படம் ஞாபகம் வந்து, 'இது வித்தியாசமான நட்பா இருக்gay' என்று ஆச்சர்யப்பட்டால், நீங்கள் நாசமாகப்போகக்கடவது. இது வேறு மாதிரியான புனிதமான நட்பு.)



                                          (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)


செல்வகுமாருடன் அமர்ந்து வகுப்பைக் கவனிப்பதே ஒரு பேரானந்தம். முன்னிருக்கை பெஞ்சில் பெண்கள் அமர்திருக்க, அவர் பின்னிருக்கை பெஞ்சிலிருந்து ‘இரட்டை அர்த்த’ (அ) நேரடி அர்த்த அசைவ நகைச்சுவையை அடிக்குரலில் சத்தமின்றி எடுத்து விட்டால், உம்மனாம்மூஞ்சி லட்சுமிக்குக்கூட சிரிப்பு வரும். அந்த அளவிற்கு நகைச்சுவை செய்வார். வெண்ணிற ஆடை மூர்த்தி கூட இவரிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும். தவிர, ஒரு நாள் தெரியாமல் அவர் அருகில் உட்கார்ந்து  ஒரு வகுப்பைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது செல்வா, “மேடம் எனக்கு ஒரு டவுட், இங்க வந்து கொஞ்சம் க்ளியர் பண்ணுங்களேன்’ என்று சொன்னார். ஆனால், மேடமோ நாளை பார்க்கலாம் என்றார். செல்வா, என் காதில் சொன்னார். “மேடம் அந்த 3 நாள்ல இருக்காங்க. பார்த்தாவே டயர்டா தெரியறாங்க பாரு. கூப்பிட்டா கிட்ட வரமாட்டாங்க”. “இது எப்படி உங்களுக்குத் தெரியும்” என்றேன். ”போன மாசம் கூட இப்படித்தான் இருந்தாங்க. இன்னையோட கரெக்டா 30 நாள் ஆகுது”. சொல்லிவிட்டு சிரித்தார். உண்மையில் செல்வா கணக்கில் சூரப்புலி என்று அன்று தான் நான் உணர்ந்தேன். அதன்பிறகு, செல்வா அருகில் நான் அமர்வதில்லை. நிற்க, எனக்கு கணக்குப்பாடம் பிடிக்காது.


உதய கீதம் படத்தில், தேங்காய்க்குள் பாம் இருக்கிறது என்று உதார் விடுவார் கவுண்டமணி. பிறகு, அந்தப் புரளி கடைசியில் அவரிடமே வந்து சேரும். செல்வாவும் அப்படித்தான். ஒரு புரளியை சத்தமின்றி கிளப்பிவிட்டு, அப்பிராணியாய் முகத்தை வைத்துக்கொள்வார். இதனால்தான் அவருக்கு ‘ரூமர்’ என்று செல்வா என்று பெயர் வந்தது.


2004 ஆம் ஆண்டு முதன்முதலாக SakSoft என்னும் கம்பெனியில் நான் வேலைக்கு சேர்ந்தபோது, (அப்போ 1996 -லிருந்து 8 வருஷமா, நீ என்னத்தப் புடுங்கிக்கிட்டிருந்த என்று நீங்கள் கேட்டால், பொறுமை. அதைப்பற்றி ‘கும்பகர்ணன்’ என்னும் தலைப்பில் என்னைப்பற்றி எழுதும்போது, விளக்கம் தருகிறேன்). செல்வா ‘சத்யத்தில்’ வேலை பார்த்துகொண்டிருந்தார். ஒரு நாள் எனக்கு ஃபோன் செய்து, கிட்டத்தட்ட 2 மணி நேரம் பேசினார். மனிதர் மாறவேயில்லை. பழச எல்லாம் மறங்க என்று அட்வைஸ் செய்தார். அவர் பல வெளிநாடுகளுக்கு சென்று வந்ததையும் அறிந்துகொண்டேன். பிற்பாடு SakSoft-ல் தாக்குபிடிக்க முடியாமல், ஓடி வந்துவிட்டேன். பிறகு ஒரு நாள் ‘டைடல்’ பார்க்கில் உள்ள ‘சத்யம்’ கம்பெனியில், நண்பர் பரணீதரன் ஏற்பாடு செய்த இண்டர்வியூவுக்கு வந்தபோது, செல்வாவைப் பார்த்தேன். அதே சிரிப்பு. அதே பூனைக்கண் பார்வை. நன்றாக பேசினார். பிறகு நடந்த இண்டர்வியூவில், ஒரு கறுத்தப் பெண் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சொத்தையாக பதிலளித்தேன். அந்தப் பெண் என்னைப் பார்த்து சொன்னார். ‘அடிப்படையே உங்ககிட்ட சரி இல்லை. நல்லாப் படிங்க”. தலையாட்டிவிட்டு வந்தேன். பரணீதரன் திட்டினார். “யோவ் என்னய்யா, இப்படி சொதப்பிட்ட! நீ சுமாரா பதில் சொல்லியிருந்தா கூட, செலக்ட் ஆயிருப்ப. நேரா பூனாவுக்கு போஸ்டிங்க் போட்டு அனுப்பியிருப்பாங்க”. “சாரி பாஸ்” என்று தலையை சொறிந்தேன். அதன் பிறகு 2 மாதம் கழித்து, வேறு ஒரு பூனா கம்பெனியில் செலக்ட் ஆகி, இன்னமும் பூனாவிலிருக்கிறேன். விதி வலியது.


அடடா, செல்வா பற்றி சொல்லவந்துவிட்டு, சுயபுராணம் பாடுகிறேன் பாருங்கள்.


ஒருமுறை கல்லூரியில் நடந்த Quiz போட்டியில் நானும், செல்வாவும், செந்தில்குமரனும் ஓரணியாக கலந்து கொண்டோம். அதில், வெற்றி பெற நாங்கள் செய்த தகிடுத்தத்தங்கள், நித்யானந்தா செய்ததை விடவும் மொள்ளமாறித்தனம். இறுதியில் நாங்கள் தான் வென்றோம் என்பதை சொல்லித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா? அது, ரகசியமாகவே இருக்கட்டும் விடுங்கள். அதை இப்போது சொல்லி, நிகழ்ச்சி நடத்திய பங்க்ஸ், பிரபுராஜ் மற்றும் சிவசங்கரை வெறுப்பேற்ற விரும்பவில்லை. மேலும், நாங்கள் செய்த கேப்பமாறித்தனத்தை அவர்கள் வேறு ஒரு சோர்ஸ் மூலம் அறிந்துகொண்டு எங்களைத் திட்டியதை நாங்கள் இன்னொரு சோர்ஸ் மூலம் அறிந்துகொண்டு மகிழ்ந்தோம்.


இறுதியாக, நான் செல்வாவிடம் கேட்க மறந்த (அ) இப்போது கேட்க நினைக்கும் கேள்வி.

1. அன்று இரவு, ஷண்முகப்பிரியாவின் லாகின் - இல் நுழைந்து, அவரின் பேசிக் மொழி ப்ரோகிராம்களை அழித்து, அவரைப்பற்றி தாறுமாறாக வெறும் REM Statement-ல் டைப் செய்து வைத்தது யார்?

2. லேப் செந்தில் அதைக் கண்டுபிடித்தவுடன், பிரின்சிபால் ராமலிங்கத்திடம் சென்று விசாரணையில் கலந்து கொண்டது யார் யார்?

நாளை இடம்பெற இருப்பவர் “ஒன்றை” உதயகுமார். கோக்குக்கும், கோக்கோ-கோலாவுக்கும் வித்தியாசம் அறியா அப்பிராணி இவர்.

வெள்ளி, பிப்ரவரி 26, 2010

சாமியார் (போலி அல்ல!)

       சரவணன் ஜீ, எல்லோரையும் “ஜீ” என்றுதான் அழைப்பார். அப்போதெல்லாம் நான் ஹிந்தி எதிர்ப்புக்கொள்கை எதையும் கடைபிடிக்காததால், நானும் அவரை “ஜீ” என்று தான் அழைப்பேன். ஒட்டுமொத்த வகுப்புமே அவரை “ஜீ” என்றுதான் அழைக்கும்.


                                                   
                                        (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)

ஜீ அவர்கள், ரஜினி-கமல் இருவருக்குமே பரம ரசிகர். இருவரில் நான் யாரைக்குறை சொன்னாலும் ஜீ க்கு கோபம் வந்துவிடும். கல்லூரி படித்த காலத்தில் நான் விஜயகாந்த் ரசிகனாக இருந்தேன். (இப்போது நான் ரசிப்பது என்னை மட்டுமே). இந்த விஷயத்தை நான் ஜீயிடம் சொன்னபோது, அவர் விழுந்து விழுந்து சிரித்தது எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. அதேபோல், ஜீ - இளையராஜாவின் பரம வெறியர். அதேசமயம் ஏ.ஆர்.ரஹமான் என்றால் எரிந்து விழுவார். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் பிரபலமாகிக்கொண்டிருந்தார். ஜீ அவர்கள் ஹாஸ்டல் அறைகளைக் கடந்து செல்லும்போது எதாவது ஒரு ரூமில் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தால், அவர் அதற்குப்பின் அந்த அறை நண்பர்களிடம் நட்பு வைத்துக்கொள்ளமாட்டார்.


ஒருமுறை நான் நண்பர் எல்.எஸ்.செந்தில்குமாரின் அறையில், பம்பாய் திரைப்படப்பாடல்களைக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தேன். அந்த அறைக்கு வந்த ஜீயின் முகம் என்னைப் பார்த்ததும் சட்டென மாறியது. எனக்கு எதுவும் புரியவில்லை. “என்ன ஜீ நீங்க கூட இப்படியா?” என்றார் என்னிடம். “என்ன சொல்றீங்க?” என்றேன். “என்ன ஜீ, இவன் பாட்டையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கீங்க” என்றார். எனக்குப் புரிந்துவிட்டது. நான் நைஸாக ஜகா வாங்கினேன். “ஜீ, ஏ.ஆர். எப்படி அடிச்சிருக்கான்னு பாக்கத்தான், இந்தப்பாட்டைக் கேட்டுக்கிட்டிருக்கேன்” என்றேன். சமாதானமாகிவிட்டார்.


ஒரு நாள் ஜீ எல்லோரையும் அவரின் அறைக்கு அழைத்தார். அங்கே, அவரின் டேப்-ரெக்கார்டரில், இளையராஜா இசை அமைத்த “அவதாரம்” படத்தின் கேசட்டைப் போட்டார். “அரிதாரத்தைப் பூசிக்கொள்ள ஆச...” - பாட்டைக்கேட்டதும், ஜீயின் முகம் பூரிப்பானது. பெருமிதம் மிகுந்த முகத்துடன் அவர் எல்லோரையும் பார்த்தார். அப்போது எல்.எஸ். செந்தில்குமார் சொன்னான். “ஏண்டா, இந்தப்பாட்டைக்கேட்டா ஒப்பாரி மாதிரி இருக்குது இல்ல”. ஜீயின் முகம் கடுகடுத்தது. “இங்கபாரு, புடிச்சிருந்தா கேளு. இல்லைன்னா போயிடு”. எல்.எஸ்.செந்தில் போய்விட்டான் (அவன் ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகன்).


தொடர்ந்து அதே பாடலில் ஜானகி ஒருவரியைப் பாடினார்..

“பாட்டுன்னு நெனைப்பதெல்லாம், இங்கு பாட்டாக இருப்பதில்ல....” - அதைத் தொடர்ந்து இளையாராஜா சொல்லுவார். “அது எம் பாட்டில்ல”...

உற்சாக மிகுதியில் ஜீ கைதட்டி என்னிடம் சொன்னார். “பாத்தீங்களா ஜீ, தலைவர் “அது எம் பாட்டில்ல”ன்னு சொல்றார். யாரைத் திட்டுறார்னு தெரியுதா?”... நான் தலையாட்டினேன்.

தற்சமயம், அமெரிக்காவில் வாழும் ஜீ யிடம் பேசியபோது, அவர் இன்னமும் இளையராஜாவின் ரசிகராகத்தான் இருக்கிறார் என்பது தெரிந்தது. அது மட்டுமல்லாமல், அவர் சில தமிழ்த்திரைப்படங்களை அமெரிக்க தியேட்டர்களுக்கு விநியோகம் செய்து சம்பாதித்தும், கைகளைச் சுட்டுக்கொண்டுமிருக்கிறார் என்பது தெரிய வந்தது.

ஒரு முறை எங்கள் மகாத்மா காந்தி விடுதியிலிருக்கும் வற்றாத கிணறு, கோடையில் வற்றியபோது, நாங்கள் எல்லோரும் குளிப்பதற்காக அருகிலிருக்கும் வேறு கிணறுகளுக்கு சென்றதுண்டு. அப்போது ஒருமுறை, நீச்சல் தெரியாத ஜீ கால் வழுக்கி, கிணற்றில் விழுந்துவிட்டார். அப்போது அவரைக் காப்பாற்றி கரை சேர்த்தது இளவரசன். (அவர் எப்படி இளவரசனால் காப்பாற்றப்பட்டார் என்பதை பிறிதொரு சமயம் சொல்கிறேன்). அதன்பிறகு, சில சமயம் தூக்கத்தில் கிணற்றில் மூழ்குவது போல் கனவு கண்டு, கத்திக்கொண்டு எழுதுவார்.


இவருக்கு சாமியார் என்று பெயர் எப்படி வந்ததென்றால், இவர் பெண்களை நிமிர்ந்து கூட பார்க்கமாட்டார். (என்னைப்போலவே).அதனால் தான், இருவருக்குமே இரண்டு பெண் குழந்தைகள்.


நாளை இடம்பெற இருப்பவர் “ரூமர்” செல்வகுமார்.இவருக்கு “சாணக்கியன்” என்றப் பட்டபெயரும் உண்டு.

வெள்ளி, பிப்ரவரி 19, 2010

பங்காரு (அடிகளார் இல்லை)

                 நண்பர் செந்திலுக்கு “பங்காரு” என்ற பட்டப்பெயர் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது. தெரிந்த நண்பர்கள் தயவு செய்து பின்னூட்டமிடலாம்.

                                         (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)

நிற்க, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் “பங்காரு அடிகளார்” அவர்களுக்கும், செந்தில்குமாருக்கும் எந்த சம்மந்தமும் இருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

தனக்கான பஞ்ச் டயலாக்கை, தானே எழுதிக்கொண்ட அமெரிக்காவாழ் இளையதளபதி விஜய் இவர் (The freeky fellow from Madras). பின்னே, மற்ற நண்பர்களுக்கு இவர் எழுதியிருக்கு பஞ்ச் டயலாக், கொலைவெறியோடு எழுதப்பட்டது போலிருக்கும். அடுத்தடுத்த அத்தியாயங்களில் நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள்.

ஆறு விரல் அதிர்ஷ்டக்காரர். சினிமா நடிகை,நயன்தாராவுக்கும் கையில் 6 ஆறு விரல் என்று படித்திருக்கிறேன்(ரொம்ப முக்கியம்).

மேல் படிப்புக்காக - எல்லோரும் கிராமத்திலிருந்து சென்னை செல்வது வழக்கம். இந்த கிளிஷேவை மாற்றி, சென்னையிலிருந்து புத்தனாம்பட்டி வந்து எம்.சி.ஏ. படித்த பின்நவீனத்துவ கலகக்காரர் இவர். எங்கள் வகுப்பில், ஆங்கிலத்தில் (சென்னை பாஷையிலும்) வெளுத்துக்கட்டிய சைதைப் புயல்.

1995ஆவது வருடம் என்று நினைக்கிறேன். ஒருமுறை நண்பர் எல்.எஸ். செந்தில்குமாரும், நானும் பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்ய, சென்னை சென்றபோது - செந்திலின் சைதாப்பேட்டை, தாட்ஹண்டர் காலனி வீட்டில் தான் தங்கினோம்.அன்று பயங்கர மழை பெய்து கொண்டிருந்தது.அவரின் அம்மா சமைத்து எங்களுக்குப் பறிமாறிய அந்த சூடான, சுவையான உணவு இன்னமும் என் நினைவிலிருக்கிறது. அன்று சாயங்காலம், எங்களை ஒரு டீக்கடைக்கு அழைத்து சென்று சூடாக பஜ்ஜி வாங்கித்தந்தார் செந்தில். அமெரிக்கா சென்று, செட்டில் ஆன பிறகும் செந்தில் அந்த பஜ்ஜியை மறக்கவில்லை போலும். ஒருமுறை, செந்திலின் கில்லி எஃப்.எம்.மில்(http://www.gillyfm.com/), பாடல்களை அவர் தொகுத்து வழங்கிய ஒலிக்கோவையைக் கேட்டேன். அதில் செந்தில் இவ்வாறு சொல்லியிருந்தார்.

“ஒரு நல்ல மழை காலத்துல, சூடா பஜ்ஜி வாங்கி சாப்பிட்டா, ஆஹா, எவ்வளவு சூப்பரா இருக்கும்”.....

ம்...பழசை மறக்காத மனுஷன். என்ன செய்ய மச்சி? பஜ்ஜி சாப்பிட ஆசை வந்தா, சைதை வந்துட்டுப்போங்க...

கில்லி எஃப்.எம்.மில் செந்திலின் குரல் கேட்டபோது, ஒரு சிறந்த ரேடியோ ஜாக்கியை, தமிழகம் இழந்துவிட்டதை உணரமுடிந்தது. செந்தில் தன் மகள் ஸ்வாதியுடன் நடத்திய உரையாடல் கவித...கவித...(பெண்பிள்ளைகள் பெற்ற என் மாதிரி ஆட்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்).

நாளை,  ஆட்டோகிராஃபில் இடம் பெற இருப்பவர் “சாமியார்” என்ற பட்டப்பெயருடன் அழைப்படும் சரவணன் ஜீ அவர்கள்.

வியாழன், பிப்ரவரி 18, 2010

நேரு (நினைவு) கல்லூரி நினைவுகள்


        ஆயிற்று. கிட்டத்தட்ட 14 ஆண்டுகள். கல்லூரி நாட்களில்,நண்பர்களாய் துள்ளித்திரிந்த நாம், இன்று உலகின் ஏதேதோ மூலைகளில் குடும்பத்துடனோ, தனியாகவோ வசித்துவருகிறோம். குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, தொழில் நுட்ப அறிவையும் வளர்த்துக்கொண்டு, ரிசசனையும் சமாளித்துக்கொண்டு, .....என்ன வாழ்க்கை இது...

சரி, மொக்கை போட்டது போதும். விஷயத்திற்கு வருகிறேன்.

போன வருஷம் என் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது, என் மச்சான் குணசேகர் என்னிடம் சில காகிதங்களைக் கொடுத்தான். அட, அது நாம் கல்லூரி படிப்பின் கடைசி வருடம் தயாரித்த ஆட்டோகிராஃப். ஒவ்வொருவருக்கும், பட்டப்பெயர் மற்றும் பஞ்ச் டயலாக் (பெரும்பாலும் ‘பங்க்ஸ்’ஸால் எழுதப்பட்டது) எல்லாம் கொடுத்து, படிக்க தமாஷாக இருந்தது.

என்னுடைய இந்த இணையத்தளத்தில், தினம் ஒரு நண்பரின் ஆட்டோகிராஃப் பக்கத்தை பதிவேற்றம் செய்யலாம் என்றிருக்கிறேன். அதற்கு முன்னோட்டமாய், ஆட்டோகிராஃபின் முதல் பக்கத்தை கீழே இணைத்துள்ளேன்.

                               (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)

படித்துவிட்டு, பின்னூட்டம் (Feedback) இடுங்கள் நண்பர்களே.

இந்த ஆட்டோகிராஃப் தயாரிப்பில், பெரும் பங்கு வகித்த B.செந்தில் குமார் (பங்காரு) முதல் ஆளாய் நாளை இடம் பிடிக்க இருக்கிறார்.