வெள்ளி, மார்ச் 26, 2010

டாக்டர் ருத்ரனும் நானும்

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன் நான் தீவிர மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். மூச்சு சட்டென்று நின்று போய்விடுமோ என்ற தேவையற்ற பயம் என்னை பலமாக பீடித்திருந்தது. நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்பட்டு பயப்படுத்தும். கையில் நாடி ஒழுங்காகத் துடிக்கிறதா என்று அடிக்கடி சுய பரிசோதனை செய்துகொள்வேன். பஸ்ஸில் பயணம் செய்யும்போது நெஞ்சு அடிக்கடி அடைப்பதுபோல் உணர்வு ஏற்பட்டு, தலையை மேலும், கீழும் ஆட்டிக்கொள்வேன். யாராவது அப்போது என்னைப்பார்த்தால், அந்த ஆளைக் கொல்லவேண்டும் என்ற வெறி ஏற்படும். பஸ்ஸை விட்டு இறங்கி ஓட யத்தனித்து, பலமுறை கண்டக்டர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல், இறங்கி வேறு பஸ் பிடித்து வீட்டுக்கு வந்துவிடுவேன்.

அப்போதெல்லாம்,என்னை ஏகப்பட்ட மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று வைத்தியம் பார்த்தார்கள்.அவர்களில் பெரும்பாலானோர் எனக்கு பயம் இருப்பதாகக் கூறி அல்ப்ராக்ஸ் மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். நோய் எனக்கு தீர்ந்தபாடில்லை. நாளாக, நாளாக எனக்கு நோய் அதிகரித்துக்கொண்டே வந்தது. எல்லோரிடமும் பேசுவதை நிறுத்திக்கொண்டேன். சோற்றைக்கண்டால் வெறுப்பாக வரும். மீறி சாப்பிட்டால், கழுத்து நரம்புகள் இறுக்கிக்கொள்ளும். விழுங்க முடியாது. எனக்கு நம்பிக்கை சுத்தமாகப் போய்விட்டது. வீட்டைவிட்டு வெளியில்கூட வராமல் வீட்டிலேயே அடைந்துக்கிடந்தேன். விரைவில் நான் இறந்துவிடுவேன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.


கடைசி முயற்சியாக என்னை ஒரு சாமியாரிடம் கூட்டிச்சென்றார்கள். அந்த ஆள் ஒரு எலுமிச்சைப் பழத்தில் சூடம் ஏற்றி, அதை உற்றுப்பார்க்கச் சொன்னான். என்னால் அதில் கவனம் செலுத்திப்பார்க்கமுடியவில்லை. அப்புறம் தாயத்து ஒன்று கொடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ளச் சொன்னான். தூக்கத்தில் அந்தத் தாயத்து என் இடுப்பைப் பதம் பார்த்தது மட்டுமே அதனால் ஆன பலன். பிறகு, என்னை குணசேகரம் என்ற ஊருக்கு அழைத்து சென்று, அந்தக்கோயிலில் பைத்தியங்களுக்கு முகத்தில் தெளிக்கும் நீரை என் முகத்தில் தெளிக்க வைத்தார் என் மாமா ஒருவர். எனக்கு அது அவமானமாக உணர்ந்தேன். அவரிடம் சண்டை போட்டுக் கத்தினேன். மீண்டும் முகத்தில் தண்ணீர் தெளித்தாகள். அந்தக்கோயிலில் இசைக்கப்பட்ட வாத்தியங்களில் அதிர்வுகள் தாங்காமல் வெளியே ஓடி வந்துவிட்டேன். “ பாத்தியா, பைத்தியங்களால இந்தக்கோயில் சாமி முகத்தை ரொம்ப நேரம் பாத்துக்கிட்டு இருக்கமுடியாது. அது தான் நீ ஓடி வந்துட்ட” என்று சொல்லி என் மாமா என்னை மேலும் வெறுப்பேற்றினார்.

ஊரிலிருந்து ஒருநாள் என் மாமா மகன் செந்தில் குமார் (இப்போது இவர் என் தங்கையின் கணவர்) வந்திருந்தார். அவர் என்னிடம் ஒரு புத்தகத்தைக்கொடுத்துப் படிக்கச்சொன்னார். அது டாக்டர் ருத்ரன் எழுதிய “மனநோய் - சிகிச்சை முறைகள்” என்னும் புத்தகம். அப்போது எனக்கு என் மாமன் மகன் மீது பயங்கரக் கோபம் வந்தது. புத்தகத்தைத் தூக்கி எறிந்தேன். ஒரு மணி நேரம் கழித்து என் கோபம் தணிந்தது. அப்படி அந்தப் புத்தகத்தில் என்னதானிருக்கிறது என்ற ஆவலில் அதைப்படிக்க ஆரம்பித்தேன்.

முற்றிலும் பிரக்ஞையின்றி, சட்டையைக்கிழித்துக்கொண்டு ரோட்டில் திரிபவர்களை மட்டுமே பைத்தியம் என்று நான் நினைத்திருந்தேன். மனதில் ஏற்படும் குழப்பங்கள் கூட ஒருவரை மனநோயாளி ஆக்கிவிடக்கூடும் என்பதை படித்தபோது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. மிகத்தெளிவானத் தமிழில் அழகாக, மனநோய்களின் வகைகளையும், அவற்றின் குறியீடுகளையும் தெளிவாக விளக்கியிருந்தார் டாக்டர் ருத்ரன் அவர்கள். எனக்கு வந்திருப்பது தீவிர மனசோர்வு நோய் என்பதை, அந்தப் புத்தகத்தின் மூலம் அறிந்துகொண்டேன்.

அன்று அலுவலகத்திலிருந்து வந்த என் தந்தையிடம் சென்று கேட்டேன். “நான் கடைசியா ஒரு சைக்கியாட்ரிஸ்ட்ட பாக்கலாம்னு நெனைக்கிறேன்”. அவர் சற்று இகழ்ச்சியாக என்னைப்பார்த்துக்கேட்டார். “சைக்கியாட்ரிஸ்ட்னா, பைத்தியக்கார டாக்டர் தான?”. நான் சொன்னேன் “டாக்டர் பைத்தியக்காரர் கிடையாது. அவரைப்பாக்கப் போறவங்கதான் பைத்தியம்”. அவர் தன் நண்பர்களிடம் கேட்டறிந்து சேலத்தில் அப்துல் ஜப்பார் என்ற டாக்டரிடம் என்னைக்கூட்டிச்சென்றார். அப்புறம் நடந்ததெல்லாம் அற்புதம்.

இன்றைக்கு நான் மென்பொருள் துறையில் பணிபுரிகிறேன். பூனாவில் குடும்பத்தோடு வசிக்கிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மாத சம்பளம் 80,000 ரூபாய். என் ஊரார் என்னைக்கண்டு வியக்கிறார்கள். என் குணமே மாறிவிட்டது. (பிகேவியர் மாடிஃபிகேசன் தியரி மூலம்). எனக்கு இப்போது எந்தப்பிரச்சினையும் இல்லை.

என் வாழ்க்கையை எண்ணிப்பார்க்கும்போது, எனக்கு ஒரு நல்ல வழி காட்டியது டாக்டர் ருத்ரன் எழுதிய “மனநோய் - சிகிச்சைமுறைகள்” புத்தகம் தான் என்று அறுதியிட்டு சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கவேண்டியப் புத்தகம் அது.

இதுவரை நான் டாக்டர் ருத்ரன் அவர்களை சந்தித்ததில்லை. ஒருமுறை அவரைச் சந்திக்க கோடம்பாக்கம் பாலத்தின் கீழிருக்கும் அவரின் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் அப்போது அவர் அங்கு இல்லை.

இதோ இந்தக்கட்டுரை வழியாக, என் மனமார்ந்த நன்றியை டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு உரித்தாக்குகிறேன்.

45 கருத்துகள்:

  1. மிகவும் பாராட்ட வேண்டிய விசயம். மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா என அழகிய வரி உண்டு. மனம் போல் வாழ்வு என்பதும் முன்னோர்கள் சொன்னதுதான். நலமுடன் எந்நாளும் வாழ்க. திருந்த வேண்டும் என கடுமையாக உழைத்த உங்களுக்குத்தான் என் முதல் நன்றி, அதற்கு வழி சொன்னவர்களுக்கு எனது இரண்டாம் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ராதாகிருஷ்ணன்.

    பதிலளிநீக்கு
  3. மிக்க மகிழ்ச்சி நண்பரே..

    தங்களின் இன்றைய நல்ல நிலைமைக்கு காரணம் என ருத்ரன் அவர்களை நன்றியோடு அடையாளம் காட்டியது
    மிகவும் நெகிழ்ச்சிக்கு உரியது..

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி “நிகழ்காலத்தில்...” அவர்களே.

    பதிலளிநீக்கு
  5. தன்னம்பிக்கையூட்டும் பதிவு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி துபாய் ராஜா அவர்களே

    பதிலளிநீக்கு
  7. இப்படி உங்களுக்கு நேர்ந்ததைத் தைரியமாய் எழுதியதிலேயே உங்களுக்கு உள்ள தன்னம்பிக்கை தெரிகிறது.பூங்கொத்து!

    பதிலளிநீக்கு
  8. பூங்கொத்துக்கு நன்றி அன்புடன் அருணா அவர்களே!

    பதிலளிநீக்கு
  9. //மூச்சு சட்டென்று நின்று போய்விடுமோ என்ற தேவையற்ற பயம் என்னை பலமாக பீடித்திருந்தது//
    இதே போன்ற பிரச்சினை, தூக்கத்தில் மூச்சு நின்றுபோனால் என்ன செய்வது என்று தூங்காமல் இருந்த ஒருவரை குணப்படுத்தியதைப் பற்றி ஓஷோ ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

    மகிழ்ச்சியான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நம்மை நாமே அறிந்து கொள்வதில்தான் நம்முடய உயர்வு இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  11. வருகைக்கு நன்றி குலவுசனப்பிரியன் மற்றும் ஆண்டாள்மகன்.

    பதிலளிநீக்கு
  12. மனிதர்கள் பெரும்பாலோர் மனநோயின் அருகில் தான் இருக்கிறோம்! அதை உணர்ந்து கொண்டால் ஆரம்ப நிலையிலேயே சகஜ நிலைக்கு திரும்ப முடியும்!

    சிறு மாற்றம் தெரிந்தாலும் கவனித்தல் நலம்!

    பதிலளிநீக்கு
  13. சரியாகச் சொன்னீர்கள் வால்பையன். நிறைய பேருக்கு நான் நோய் அறிகுறிகளைக் கண்டுபிடித்து, அவர்களை ஆரம்ப நிலையிலேயே மனநோய் மருத்துவர்களிடம் அனுப்பியிருக்கிறேன். கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள்

    //குப்பை கொட்டுவது- பூனா//ஒரு வேலை இன்னும் உங்களுக்கு தெளிவு வரவில்லையா?

    பதிலளிநீக்கு
  15. "அப்போதெல்லாம்,என்னை ஏகப்பட்ட மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று வைத்தியம் பார்த்தார்கள்.அவர்களில் பெரும்பாலானோர் எனக்கு பயம் இருப்பதாகக் கூறி அல்ப்ராக்ஸ் மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். "

    It's strange that not a single doctor you met in the above encounters suggested you to go to a psychiatrist. Very strange indeed. Good that you finally identified the need to approach a psychiatrist yourself.

    பதிலளிநீக்கு
  16. மகிழ்ச்சி...!

    ஐ. டி. துறையில் சிலர் இப்படி செக்லுடேட் ஆகும் வாய்ப்பு அதிகம்.

    சில பெர்சனல் சம்பவங்கள் தவிர்த்து, மற்றவர்கள் உபயோகத்திற்காக - ஆறுதலுக்காக, திரு ருத்ரன் அவர்களின் ஒப்புதலோடு, ஒரு புனைவு ( நிஜத்தை வைத்து ) எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள ஸ்மார்ட் வாழ்த்துக்களுக்கு நன்றி. குப்பைகொட்டுவது என்பது நம் ஊரில், “வாழ்வது” என்று பொருள்படும் என்பது உங்களுக்குத் தெரியுமென்று நினைக்க்கிறேன். மற்றபடி நான் மிகத்தெளிவாகத்தானிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. நண்பர் பார்த்தசாரதி அவர்களே, உண்மை. எனக்குக் கூட இது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவேளை நம் டாக்டர் இந்த விஷயத்தில் ஈகோ பார்க்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஒருவர் கூட என்னை சைக்கியாட்ரிஸ்டை சென்று பார்க்கும்படி கூறவில்லை.

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்களுக்கு நன்றி விஜயசங்கர். அதிர்ஷ்டவசமாக, நான் ஐ.டி. துறையில் இருந்துகொண்டு இதுவரை மனசோர்வு அடைந்ததில்லை. எனக்கு இது முன்னமே நடந்துவிட்டது. மற்றபடி இது குறித்து ஒரு புனைவு எழுத எனக்கும் ஆசை தான்.

    பதிலளிநீக்கு
  20. இடுகையில் உள்ள நேர்மை பிடிச்சுருக்கு.

    இப்போதுள்ள சூழலில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படாதவர்கள் மிகச்சிலராகத்தான் இருக்கணும்.

    நானும் அப்படி இருந்துதான் நல்லவேளையா ஒரு டிப்ரஷனைப் பற்றி நடந்த ஆறுவார வகுப்பில் சேர்ந்து வெளிவந்தேன்.

    காரணங்கள் வெவ்வேறுன்னாலும் 'மனசிண்டே தாளம் தப்பியால் ப்ராந்தாகும் கேட்டோ!'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கு படித்தீர்கள் என்று சொல்ல முடியுமா

      நீக்கு
  21. மிக்க நன்றி துளசி கோபால். “மனசிண்டே தாளம் தப்பினால் ப்ராந்தாகும் கேட்டோ” - மனநோய்க்கு மிகச் சுருக்கமான விளக்கம்.

    பதிலளிநீக்கு
  22. மனநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரும் எப்போது வேண்டுமானாலும் வரும். அதுவும் ஒரு நோய்தான். டாக்டரைப் பார்த்தால் சரியாகிவிடும்.

    பதிலளிநீக்கு
  23. இதை மருத்துவருக்கே அனுப்பிட்டேன். நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  24. {{{“ பாத்தியா, பைத்தியங்களால இந்தக்கோயில் சாமி முகத்தை ரொம்ப நேரம் பாத்துக்கிட்டு இருக்கமுடியாது. அது தான் நீ ஓடி வந்துட்ட”}}}


    இப்படிப் பட்ட மூடநம்பிக்கை முடிவில் தான் எத்தனையோ அப்பாவிகளின் எதிர்காலம் உதயம் ஆகும்!!

    உங்கள் தன்நம்பிக்கைக்கும் சிறப்பான எதிர்காலத்துக்கும் என் வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  25. தலைவலி, உடல் நோய் வந்தால் டாக்டரிம் போகின்றோம். அதே மனதில் சிறு கஷ்டம் என்று வாந்தாலும், மன நல மருத்துவரிடம் செல்வதற்கு வெட்கப் படுகின்றோம். மன நலம் என்பது உடல் நலத்தோடு சம்பந்தப்பட்டது என்று பலருக்கு புரிவதில்லை.

    உங்கள் இடுகை நல்ல விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நண்பரே. அதற்கு உங்களுக்கு நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  26. பதிவுலகத்துக்கு புச்சா ?
    இப்படியெல்லாம் யாரையும் புகழ்ந்து எழுத கூடாது ( கருணாநிதிய தவிர ). சாரு நிலமைய பாருங்க.

    பதிலளிநீக்கு
  27. enakkum ithe mathiriyaana piracchanai kallooriyil padikkum pozhuthu vanthathu. enakku athigapadiyaana mana azuththathinaal ithu pondra ennangal thondrum. naan sendra mana nala maruththuvar perukku oru maaththiraiyai koduththuvittu sila puththagangalaiyum parinthuraiththaar. thodarnthu oru maatha mana nala aalosanai matrum payirchiyum vazhngapattu ippozhudu nalamudan irukkindren.

    பதிலளிநீக்கு
  28. வாழ்த்துக்களுக்கு நன்றி பனித்துளி சங்கர் மற்றும் செந்தழல் ரவி அவர்களே

    பதிலளிநீக்கு
  29. மனநலம் பற்றிய விழிப்புண்ர்வுக்கு தான் இதை நான் எழுதினேன். அதைப் புரிந்துகொண்டு பாராட்டியமைக்கு நன்றி நைஜீரியா ராகவன்.

    பதிலளிநீக்கு
  30. அஹோரி சார், நான் 2005 ஆம் ஆண்டிலிருந்து இணையத்தில் எழுதி வருகிறேன். தீவிர பணி காரணமாக தொடர்ச்சியாக எழுதமுடியவில்லை. நான் டாக்டர் ருத்ரனைப் புகழ்ந்தது அவரின் விழிப்புணர்வூட்டும் புத்தகங்களுக்காக மட்டுமே. ஹி...ஹி... மற்றப்டி சாரு இன்னும் அந்த சாமியாரை அற்புதம் நிகழ்த்துகிறவர் என்று குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிவருவது குமட்டுகிறது. தங்களின் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  31. ஜீவன் பென்னி, நீங்களும் என்னைப்போல் ஒருவர் தானா? வாழ்த்துக்கள் - நீங்கள் ஆரோக்கியமாக வாழ.

    பதிலளிநீக்கு
  32. ungalukaaga dr rudran avarugaludaiya blog

    http://rudhrantamil.blogspot.com/

    sasikumar

    பதிலளிநீக்கு
  33. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி விதூஷ்.

    பதிலளிநீக்கு
  34. நண்பா உன்னை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது

    பதிலளிநீக்கு
  35. பெத், இந்த பக்கத்த பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றி. இப்படி ஒரு நல்ல மனிதன அறிமுகப்படுத்திய பாண்டியனுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  36. பெத், இந்த பக்கத்த பகிர்ந்ததுக்கு ரொம்ப நன்றி. இப்படி ஒரு நல்ல மனிதன அறிமுகப்படுத்திய பாண்டியனுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  37. இன்றைய சூழலில் பலபேருக்கு மன சம்மந்தமான பல பிரச்சனைகள் இருக்கின்றது, அதை நாம் கண்டறிந்து தக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.நானும் சுமார் 7 வருடங்களுக்கு முன்னால் நானும் மன சம்மந்தமான பிரச்சனைகளில் சிக்கி தவித்தேன். பிறர் வழிகாட்டுதல் இன்றி நானே ஒரு மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்று குணமனேன்.. காச்சல் தலைவலி போன்றுதான் மன சம்மந்தமான பிரச்சனைகளும்,

    பதிலளிநீக்கு