வெள்ளி, மார்ச் 26, 2010

டாக்டர் ருத்ரனும் நானும்

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன் நான் தீவிர மனநோயினால் பாதிக்கப்பட்டிருந்தேன். மூச்சு சட்டென்று நின்று போய்விடுமோ என்ற தேவையற்ற பயம் என்னை பலமாக பீடித்திருந்தது. நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்பட்டு பயப்படுத்தும். கையில் நாடி ஒழுங்காகத் துடிக்கிறதா என்று அடிக்கடி சுய பரிசோதனை செய்துகொள்வேன். பஸ்ஸில் பயணம் செய்யும்போது நெஞ்சு அடிக்கடி அடைப்பதுபோல் உணர்வு ஏற்பட்டு, தலையை மேலும், கீழும் ஆட்டிக்கொள்வேன். யாராவது அப்போது என்னைப்பார்த்தால், அந்த ஆளைக் கொல்லவேண்டும் என்ற வெறி ஏற்படும். பஸ்ஸை விட்டு இறங்கி ஓட யத்தனித்து, பலமுறை கண்டக்டர்களிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல், இறங்கி வேறு பஸ் பிடித்து வீட்டுக்கு வந்துவிடுவேன்.

அப்போதெல்லாம்,என்னை ஏகப்பட்ட மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று வைத்தியம் பார்த்தார்கள்.அவர்களில் பெரும்பாலானோர் எனக்கு பயம் இருப்பதாகக் கூறி அல்ப்ராக்ஸ் மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். நோய் எனக்கு தீர்ந்தபாடில்லை. நாளாக, நாளாக எனக்கு நோய் அதிகரித்துக்கொண்டே வந்தது. எல்லோரிடமும் பேசுவதை நிறுத்திக்கொண்டேன். சோற்றைக்கண்டால் வெறுப்பாக வரும். மீறி சாப்பிட்டால், கழுத்து நரம்புகள் இறுக்கிக்கொள்ளும். விழுங்க முடியாது. எனக்கு நம்பிக்கை சுத்தமாகப் போய்விட்டது. வீட்டைவிட்டு வெளியில்கூட வராமல் வீட்டிலேயே அடைந்துக்கிடந்தேன். விரைவில் நான் இறந்துவிடுவேன் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.


கடைசி முயற்சியாக என்னை ஒரு சாமியாரிடம் கூட்டிச்சென்றார்கள். அந்த ஆள் ஒரு எலுமிச்சைப் பழத்தில் சூடம் ஏற்றி, அதை உற்றுப்பார்க்கச் சொன்னான். என்னால் அதில் கவனம் செலுத்திப்பார்க்கமுடியவில்லை. அப்புறம் தாயத்து ஒன்று கொடுத்து இடுப்பில் கட்டிக்கொள்ளச் சொன்னான். தூக்கத்தில் அந்தத் தாயத்து என் இடுப்பைப் பதம் பார்த்தது மட்டுமே அதனால் ஆன பலன். பிறகு, என்னை குணசேகரம் என்ற ஊருக்கு அழைத்து சென்று, அந்தக்கோயிலில் பைத்தியங்களுக்கு முகத்தில் தெளிக்கும் நீரை என் முகத்தில் தெளிக்க வைத்தார் என் மாமா ஒருவர். எனக்கு அது அவமானமாக உணர்ந்தேன். அவரிடம் சண்டை போட்டுக் கத்தினேன். மீண்டும் முகத்தில் தண்ணீர் தெளித்தாகள். அந்தக்கோயிலில் இசைக்கப்பட்ட வாத்தியங்களில் அதிர்வுகள் தாங்காமல் வெளியே ஓடி வந்துவிட்டேன். “ பாத்தியா, பைத்தியங்களால இந்தக்கோயில் சாமி முகத்தை ரொம்ப நேரம் பாத்துக்கிட்டு இருக்கமுடியாது. அது தான் நீ ஓடி வந்துட்ட” என்று சொல்லி என் மாமா என்னை மேலும் வெறுப்பேற்றினார்.

ஊரிலிருந்து ஒருநாள் என் மாமா மகன் செந்தில் குமார் (இப்போது இவர் என் தங்கையின் கணவர்) வந்திருந்தார். அவர் என்னிடம் ஒரு புத்தகத்தைக்கொடுத்துப் படிக்கச்சொன்னார். அது டாக்டர் ருத்ரன் எழுதிய “மனநோய் - சிகிச்சை முறைகள்” என்னும் புத்தகம். அப்போது எனக்கு என் மாமன் மகன் மீது பயங்கரக் கோபம் வந்தது. புத்தகத்தைத் தூக்கி எறிந்தேன். ஒரு மணி நேரம் கழித்து என் கோபம் தணிந்தது. அப்படி அந்தப் புத்தகத்தில் என்னதானிருக்கிறது என்ற ஆவலில் அதைப்படிக்க ஆரம்பித்தேன்.

முற்றிலும் பிரக்ஞையின்றி, சட்டையைக்கிழித்துக்கொண்டு ரோட்டில் திரிபவர்களை மட்டுமே பைத்தியம் என்று நான் நினைத்திருந்தேன். மனதில் ஏற்படும் குழப்பங்கள் கூட ஒருவரை மனநோயாளி ஆக்கிவிடக்கூடும் என்பதை படித்தபோது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. மிகத்தெளிவானத் தமிழில் அழகாக, மனநோய்களின் வகைகளையும், அவற்றின் குறியீடுகளையும் தெளிவாக விளக்கியிருந்தார் டாக்டர் ருத்ரன் அவர்கள். எனக்கு வந்திருப்பது தீவிர மனசோர்வு நோய் என்பதை, அந்தப் புத்தகத்தின் மூலம் அறிந்துகொண்டேன்.

அன்று அலுவலகத்திலிருந்து வந்த என் தந்தையிடம் சென்று கேட்டேன். “நான் கடைசியா ஒரு சைக்கியாட்ரிஸ்ட்ட பாக்கலாம்னு நெனைக்கிறேன்”. அவர் சற்று இகழ்ச்சியாக என்னைப்பார்த்துக்கேட்டார். “சைக்கியாட்ரிஸ்ட்னா, பைத்தியக்கார டாக்டர் தான?”. நான் சொன்னேன் “டாக்டர் பைத்தியக்காரர் கிடையாது. அவரைப்பாக்கப் போறவங்கதான் பைத்தியம்”. அவர் தன் நண்பர்களிடம் கேட்டறிந்து சேலத்தில் அப்துல் ஜப்பார் என்ற டாக்டரிடம் என்னைக்கூட்டிச்சென்றார். அப்புறம் நடந்ததெல்லாம் அற்புதம்.

இன்றைக்கு நான் மென்பொருள் துறையில் பணிபுரிகிறேன். பூனாவில் குடும்பத்தோடு வசிக்கிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மாத சம்பளம் 80,000 ரூபாய். என் ஊரார் என்னைக்கண்டு வியக்கிறார்கள். என் குணமே மாறிவிட்டது. (பிகேவியர் மாடிஃபிகேசன் தியரி மூலம்). எனக்கு இப்போது எந்தப்பிரச்சினையும் இல்லை.

என் வாழ்க்கையை எண்ணிப்பார்க்கும்போது, எனக்கு ஒரு நல்ல வழி காட்டியது டாக்டர் ருத்ரன் எழுதிய “மனநோய் - சிகிச்சைமுறைகள்” புத்தகம் தான் என்று அறுதியிட்டு சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்கவேண்டியப் புத்தகம் அது.

இதுவரை நான் டாக்டர் ருத்ரன் அவர்களை சந்தித்ததில்லை. ஒருமுறை அவரைச் சந்திக்க கோடம்பாக்கம் பாலத்தின் கீழிருக்கும் அவரின் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் அப்போது அவர் அங்கு இல்லை.

இதோ இந்தக்கட்டுரை வழியாக, என் மனமார்ந்த நன்றியை டாக்டர் ருத்ரன் அவர்களுக்கு உரித்தாக்குகிறேன்.

வெள்ளி, மார்ச் 19, 2010

’ஒன்றை’ உதயகுமார்

முன்குறிப்பு:  இந்தத் தொடரில் நான் எழுதும் சம்பவங்கள் எதையாவது நீங்கள் ஆட்சேபித்தால், தயவுசெய்து எனக்கு அதைத் தெரியபடுத்தவும். அவற்றை நான் உடனடியாக நீக்கிவிடுவேன் என்று உத்திரவாதமளிக்கிறேன்.


                                          (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, அதன் மேல் க்ளிக் செய்யவும்)

பிரபுராஜ் பார்க்கத்தான் வளர்த்தியாய் பெரியமனிதன் போல் காட்சி அளிப்பான். ஆனால், நிஜத்தில் அவன் ஒரு சிறுவன். அதுவும் சாதாரண சிறுவன் இல்லை. குறும்புக்கார சிறுவன். அவனிடம் அடிவாங்காதவர்களை எங்கள் வகுப்பில் பார்ப்பது கடினம். (எம்.சி.ஏ. படிக்கும்போது கூட இவன் ஒரு சிறுவன் மாதிரி நடந்துகொண்டது எங்களில் பலருக்கு எரிச்சலூட்டியதுண்டு). ஆங்... உதயகுமாரை விட்டுவிட்டு பிரபுராஜ் பற்றி ஏன் சொல்லுகிறேன்? ஒருமுறை பிரபுராஜிக்கும், உதயகுமாருக்கும் சண்டை மூண்டது. பிரபுராஜின் வழக்கம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே! அதனால் நாங்கள் அந்த சண்டையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சட்டென்று சண்டை மிகக்கேவலமான முறைக்கு மாறியது. வேறொன்றுமில்லை. பிரபுராஜ் திடீரென்று உதயகுமாரை கற்களால் தாக்க ஆரம்பித்தான். உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில், பீதியில் உதயகுமார் வேகமாக ஓட ஆரம்பித்தார்.ஓடினார், ஓடினார், மகாத்மா காந்தி ஹாஸ்டலின் கிரிக்கெட் கிரவுண்டிற்கே ஓடினார். விட்டதா விதி. வடகிழக்கு திசையிலிருந்து பிரபுராஜினால் ஏவப்பட்ட கல்லொன்று வேகமாய் அக்னி-2 ஏவுகணை போல் பாய்ந்து வந்து உதயகுமாரின் வலது கணுக்காலைத் தாக்கி, இலக்கினைக் கச்சிதமாய் வீழ்த்திய மகிழ்ச்சியில் கீழே விழுந்தது. அடிபட்ட உதயகுமாருக்கு கோபமும், வீரமும் ஒரு சேர கிளம்ப, இப்போது உதயகுமார் பிரபுராஜை கற்களைக் கொண்டு தாக்க ஆரம்பித்தார். ஆனால், பிரபுராஜ் வளைந்து, வளைந்து ஓடி உதயகுமாருக்கு போக்கு காட்டினான். போதாக்குறைக்கு என்னை அடிக்க முடியாது என்று பற்களைக்காட்டி பழிப்பு காட்ட, உதயகுமாருக்கு கோபம் கட்டுக்கடங்காமல் போனது. பிரபுராஜை கற்களை வீசிக்கொண்டே துரத்தியபடி, உதயகுமார் சொன்னார் “ஒன்ற காலை ஒடைக்காம விடமாட்டன்டா”. கோயம்புத்தூர் பாஷையில் இவ்வாறு உதயகுமார் சொன்னவுடன், பிரபுராஜிக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. ஓடிக்கொண்டே பிரபுராஜ், “ஒன்றை காலை என்னடா,  ரெண்டு காலையும் ஒடைடா” என்று உதயகுமாரை வெறுப்பேற்றினான். இதுதான், உதயகுமாருக்கு “ஒன்றை” என்று நிக் நேம் வரக் காரணம். பிறகு அவர்கள் சண்டை என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது. ஆனால், பிரபுராஜின் ஒன்றைக்காலை உதயகுமார் உடைக்கவில்லை.

உதயகுமார் தற்போது பெங்களூருவிலிருக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக இருக்கிறார். அவரிடம் 3 ஆண்டுகளுக்கு முன், நான் செல்பேசியில் தொடர்பு கொண்டபோது, கல்லூரி மாணவராக என்னுடன் பழகியபோது எப்படி பேசினாரோ, அப்படியே பந்தா இல்லாமல் பேசினார். என்னைப் பற்றியும் கேட்டு, வாழ்க்கையில் முன்னுக்கு வரும்படி உற்சாகமூட்டினார். அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. சொந்த வீடும் (பெங்களூரில்), காரும் வாங்கியிருப்பதாக அவர் சொன்னபோது சந்தோஷமாயிருந்தது. (அட சத்தியமாப்பா..).நான் இன்னும் எதுவும் வாங்கவில்லை.

கல்லூரியில் படிக்கும்போது உதயகுமார் மற்ற நண்பர்களுடன் எதோ ஒரு ஊருக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கே எல்லோரும் ஒரு வட்டமான மேஜையில் அமர்ந்து டின் கோக் குடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எல்லோருடைய டின்னும், கோகோ-கோலா என்று அச்சிடப்பட்ட பக்கத்தைக்காட்டிக்கொண்டிருக்க, உதயகுமார் தன்னுடைய டின்னை பார்த்திருக்கிறார். அதில் கோக் என்று அச்சிடப்பட்டிருக்க, கோபப்பட்ட உதயகுமார் கத்தினார். “டேய் நீங்க எல்லாம் கோகோ-கோலா சாப்புடறீங்க. எனக்கு மட்டும் ஏண்டா கோக் வாங்கி கொடுத்திருக்கிறீங்க”. வழக்கம்போல் பிரபுராஜ் கோக் புரையேற பயங்கரமாக சிரித்து, உதயகுமாரை வெறியேற்றினான்.

ஏம்.சி.ஏ. இறுதியாண்டில் நானும், பொன்னுசாமியும்,  தேவநாதனும்,  உதயகுமாரும் அபினிமங்கலத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தோம். அப்போதெல்லாம், நாங்கள் இரவு நேர கம்ப்யூட்டர் லேபுக்கு அபினிமங்கலத்திலிருந்து புத்தனாம்பட்டிக்கு நள்ளிரவில், நடந்தே வருவோம், நடந்தே திரும்பிப்போவோம். உதயகுமாரிடமிருந்து நான் ப்ரோகிராம் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். கலக்குங்கள் பொள்ளாச்சி சிங்கமே!!!

நாளை இடம்பெற இருப்பவர் “ப்ரூக்பாண்ட்” விஸ்வநாதன்.  ஒரே நாளில் கணக்கு வழக்கில்லாமல் டீயை மெஷின்போல் குடிப்பவர் இவர்.

புதன், மார்ச் 17, 2010

அப்துல்லாஹ்வும், மாயாவதியும்

என்னுடைய மாமா ஒருவர் தீவிர கடவுள் மறுப்புக்கொள்கை உடையவராக இருந்தார். பெரியாரின் பேச்சில் (அ) கருத்தில் கவரப்பட்டு பகுத்தறிவுவாதியாக மாறினார். பெரியார் அறிவித்த ‘குடுமி அறுப்புப் போராட்டத்தில்’ கலந்துகொண்டு, சில பார்ப்பனர்களின் குடுமிகளை அறுத்து, அதற்காக போலீஸாரால் தேடப்பட்டிமிருக்கிறார். அப்போது, அவர் செந்தாரப்பட்டியில் இருக்கும் எங்கள் வீட்டில் தான் ஒளிந்திருந்ததாக என் தாத்தா கூறுவதுண்டு.  அச்சமயத்தில் நான் பிறந்திருக்கவேயில்லை. பிறகு என்ன ஆனதோ, திடீரென்று ஒரு நாள் தீவிர ஆன்மீகவாதியாக மாறினார். தினமும் குளித்து, முருகனை வழிபட்டு, திருநீறு பூசி, குடும்பத்தார்க்கும் தன் கையாலே திருநீறு பூசிய பிறகே அன்றைய தினத்தைத் தொடங்குவார்.

இதுபற்றி என் தாத்தாவிடம் கேட்டபோது அவர் சொன்னது: “உங்க மாமன் போலீஸுக்கு பயந்து நம்ம வீட்ல வந்து ஒளிஞ்சிக்கிட்டிருந்தான். சாமி இல்லவே இல்லைன்னு என்கிட்ட வாதம் செஞ்சான். நான் மாரியப்பன் பூசாரி கிட்ட ஒரு நாள் அவனை கூட்டிக்கிட்டு போனேன். பூசாரி கிட்டயும் உங்க மாமன் இதே மாதிரி கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டிருந்தான். மாரியப்பன், உங்க மாமனை அங்கே சுவரில் மாட்டியிருந்த ஒரு முருகன் படத்தை உற்றுப்பார்க்கச் சொன்னான். உங்க மாமன் கூட சேர்ந்து நானும் அந்தப்படத்தை உற்றுப்பாத்தேன். சற்று நேரத்தில்  புகைப்படத்திலிருந்த முருகன் சிரிக்க, உன் மாமன் பயந்துபோய்விட்டான். கூடவே, முருகன் பின்னாலிருந்த மயிலும் தன் தோகையை ஆட்டியது. அதற்குப் பின் தான் உன் மாமன் கடவுளை நம்ப ஆரம்பிச்சான்.”

என்னால் சத்தியமாக இதை நம்ப முடியவில்லை.மாமாவிடமே கேட்டேன். அவர் சொன்னார். “உங்க தாத்தா சொன்னது உண்மை தான். அது மட்டுமில்லை. நான் போன ஜென்மத்தில் பிராமணனா பொறந்ததா, ஒரு ஜோசியக்காரன் சொன்னான்”.



தலையில் அடித்துக்கொண்டேன். பெரியார் எதை எல்லாம் எதிர்த்து வந்தாரோ, அதையெல்லாம் என் மாமா மனமுவந்து ஏற்றுகொண்டிருக்கிறார்.


பெரியாரின் தி.க.விலிருந்து அண்ணா பிரிந்து வந்தபோது, கிட்டத்தட்ட கடவுள் மறுப்புக்கொள்கையை கைவிட்டு, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற புதிய கொள்கை முழக்கத்தை அறிவித்தார். முதலில் கடவுளை மறுப்பதும், பிறகு கடவுளை ஏற்றுக்கொள்வதுமாக வாழ்ந்த, வாழ்கின்ற நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் ஏற்படாத அதிர்ச்சி, பெரியார்தாசன் என்று தன் பெயரை அறிவித்துக்கொண்ட சேஷாசலம், இன்று தன் பெயரை ‘அப்துல்லாஹ்’ என்று மாற்றிக்கொண்டு,இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருகிறார் என்பதும், இனி அவர் கடவுளின் புகழைப் பரப்பப்போவதாக அறிவித்திருப்பதும்தான். அப்துல்லாஹ் எந்த அளவிற்கு, கடவுள் மறுப்புக்கொள்கையை கடைபிடித்துவந்தார் என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால், திடீரென்று அவருக்கு அவர் நம்பும் இறைவன் தன் இருப்பை எந்த நிகழ்வின் மூலம் அவருக்கு உணர்த்தியிருப்பான் என்று தெரியவில்லை.

பெரும்பாலும், வயதாக ஆக, மரணத்தின் வாசலில் இருக்கும் பலருக்கு மறு ஜென்மம் பற்றிய பயம் வரலாம். அப்படி மறுஜென்மம் என்று ஒன்று இருக்கும்பட்சத்தில், கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருந்தால் என்னவாகும் என்ற பயம் வந்து, கடவுளை பலர் நம்ப ஆரம்பிப்பார்கள். அப்படி ஏதாவது ஒன்று அப்துல்லாஹ்வுக்கு நிகழ்ந்ததா தெரியவில்லை.

எது எப்படி இருப்பினும், கடவுளை நம்ப ஆரம்பித்துவிட்ட, முன்னாள் பெரியார்தாசனை, நாம் வாழ்த்தி வைப்போம்.

நிற்க, தற்சமயம் நான் தீவிர கடவுள் மறுப்புக்கொள்கையை கடைபிடித்து வருகிறேன். ஒருவேளை நான் எதிர்காலத்தில் கடவுளை தீவிரமாக நம்ப ஆரம்பித்துவிட்டால், நான் எதனால் அப்படி மாறிப்போனேன் என்பதை அறிய நானே ஆவலாக இருக்கிறேன்.


கொசுறு: மாயாவதிக்கு ஆயிரம் ரூபாய் பணமாலை சாத்திய பகுஜன் சமாஜ் கட்சியினர், எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு அஞ்சாமல், இனிமேல் தங்களின் தலைவிக்கு பணமாலை மட்டுமே சூட்டுவோம் என்று தில்லாக அறிவித்திருக்கிறார்கள். சபாஷ்.

ஒருத்தன் மலம் கழித்துக்கொண்டே, ஏதோ தின்று கொண்டிருந்தானாம். அந்தவழியே சென்றவன் கேட்டானாம், “ஏண்டா, பேண்டுகிட்டே திங்கறே”. அதற்கு மலம் கழிப்பவன் சொன்னானாம். “நான் தொட்டுகிட்டும் தின்பேன். வேலையைப் பாத்துக்கிட்டுப் போடா”...